தற்பொழுது பல திரைப்படங்களை கையில் வைத்திருக்கும் நடிகர் விஜய் ஆண்டனி இறுதிச்சுற்று ரித்திகாவுடன் இணைந்து திரில்லர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் . "விடியும் முன்" திரைப்படத்தின் இயக்குநர் பாலாஜி கே குமார் இந்தப் படத்தை இயக்குகிறார். விஜய் ஆண்டனி நடிக்கும் கோடியில் ஒருவன், பிச்சைக்காரன் 2 மற்றும் அக்னி சிறகுகள் உள்ளிட்ட படங்கள், பலகட்ட தயாரிப்பு கட்டங்களில் இருக்கின்றன .


இந்தத் திரில்லர் படம் முற்றிலும் குழுமப்படம் போலவே இருக்குமென்றும், விஜய் ஆண்டனி அதன் ஒரு பகுதியாக மட்டுமே இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதன்முதலாய் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து, மிக விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பாக பாலாஜி இயக்கிய "விடியும் முன்" திரைப்படம் ஒரு பிரெஞ்சு நாவலைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தது என்று கூறப்பட்டது. இந்த திரில்லர் படமும் அதே போன்ற நாவலின் தழுவலாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது .