ஏபிபி-யின் ”தெற்கின் எழுச்சி” எனும் தலைப்பிலான ”ABP Southern Rising Summit” கருத்தரங்கு இன்று (அக்.12) சென்னையில் நடைபெற்று வருகிறது. நாட்டின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகளும் அரசியல்வாதிகளும் சினிமா, அரசியலில் பெண்களின் பங்கு மற்றும் 2024 மக்களவை பொதுத் தேர்தல் பற்றிய தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகையும், இயக்குனருமான ரேவதி தனது திரைத்துறையில் 40 ஆண்டுகால அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். 


மனதிற்கு நெருக்கமான மௌன ராகம்:


நிகழ்ச்சியில் பேசிய அவர், மெளன ராகம் மணிரத்னத்தின் 4வது படம். அந்த படத்தை என்னிடம் சொல்லும் போது எந்த கதையாக இருந்தாலும் நடிக்க ரெடியாக இருந்தேன். ஏனெனில், விவாகரத்து பற்றி பேச தயங்கும் அந்த காலத்தில் மௌன ராகம் மாதிரியான ஒரு படத்தில் நடித்தது எனது இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது. நான் நடித்ததிலேயே மௌன ராகம் படம் எனக்கு மிக முக்கியமான படமாக அமைந்தது. அதன்பின்னர், பல கமர்ஷியல் படங்களில் நடித்துள்ளேன். ஆனால் அதற்கு எல்லாத்துக்கும் ஈடாக ஒரே ஒரு படமாக மௌன ராகம்  உள்ளது. 


சினிமா துறையில் பெண்களை பொறுத்தவரை கதை, திரைப்பட தயாரிப்பு, ஆடை என எல்லாமே மாறிவிட்டது. அதற்கு ஏற்றார்போல் திரைப்படத்துறையும் மாறிவிட்டது. என்னுடைய தந்தை ஓய்வு பெற்ற ராணுவத்துறை அதிகாரி. இதனால் வட இந்தியா மற்றும் தென்னிந்தியாவில் வசித்து வந்துள்ளேன். இதனால் அதிகமான மொழிகளை தெரிந்து கொள்ள முடிந்தது. ஆனால், மலையாளம் மற்றும் தமிழ் மொழி எனக்கு சரளமாக வரவில்லை. ஆனாலும், நேரம் ஒதுக்கி மொழிகளை கற்றுக் கொண்டேன்.


இளையராஜா பாடல்கள் பிடிக்கும்:


தமிழ் சினிமாவில் இளையராஜாவின் பாடல்கள் மிகவும் பிடித்த ஒன்று எனக்கு. பெரும்பாலான பெண்கள், எந்த கேரக்டர் சரியானது என்பதை தெரிந்து கொள்வதில் சிரமத்தை மேற்கொள்வார்கள். ஆனால், சரியான கேரக்டரை தேர்வு செய்தால் வளர்ச்சி அடைய முடியும்.


80களில் பிரபலமான இருந்த இயக்குநர் பாரதிராஜா தான் என்னை திரைத்துறையில் அறிமுகப்படுத்தினார். அதனால் நான் ஆசீர்வதிக்கப்பட்டதாகவே உணர்ந்து வருகிறேன். ”நீ கதையையும், கேரக்டரையும் புரிந்து கொள்ள வேண்டும்” என எனக்கு சினிமா குறித்து பலவற்றை கற்று கொடுத்தார். ஏனென்றால் நான் சினிமா பின்னணியில் இருந்து வரவில்லை. 


சினிமாத்துறையை பொறுத்தவரை நம்பிக்கை என்பது முக்கியமானதாக இருக்க வேண்டும். இயக்குநர்கள் நம்பிக்குரியவராக இருந்தால் பிரச்சனை இல்லை. கமல்ஹாசன், சிவாஜி உள்ளிட்டோருடன் நடித்துள்ளேன். கைதியின் டைரி மற்றும் புன்னகை மன்னன் படங்களின் மூலம் இருவரிடமும் பணியாற்றிய அனுபவம் இருக்கிறது. இந்திய சினிமாவில் நடிகர், நடிகைகள் டான்ஸ் தெரிந்து கொண்டிருப்பது அவசியமானதாக உள்ளது. ஆனால் நடிகர்களுக்கு சண்டை தெரிந்து கொண்டிருக்க வேண்டும். இருந்தாலும், நடிகையாக சண்டை காட்சி இருக்கும் படங்களில் நடித்துள்ளேன். அது அவசியமானதும் கூட” என பேசியுள்ளார்.