“வாழும் நாட்களில் வாழ்வதைக் காட்டிலும் இறந்த பின்னும் அனைவர் நெஞ்சங்களிலும் வாழ்வது தான் வாழ்க்கை” என்ற பொன்மொழிக்கு சிறந்த  ஒரு உதாரணமாக சகாப்தமாக திகழ்ந்தவர் தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்படத்தில் மட்டும் ஹீரோவாக இல்லாமல், அரசியல் வாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்விலும் ஹீரோவாகவே வாழ்ந்த இந்த ரியல் ஹீரோவின் 107ஆவது பிறந்தநாள் இன்று. 


 



ஏழை பங்காளன் எம்.ஜி.ஆர்.:


நாடக நடிகனாக பயணத்தைத் தொடங்கி அதன் மூலம் திரைப்படத்துறையில் வாய்ப்பு பெற்ற பிறகு தன்னுடைய அயராத உழைப்பினால் முன்னேறி பிரபலமான நடிகரானார். அவரின் நடிப்பு அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாகக் கவர்ந்து மிகவும் நெருக்கமாக கொண்டு சென்றது. 


பணமும் பெருமையும் சினிமா மூலம் சம்பாதித்த எம்ஜிஆர், அதில் நேர்மையையும் கொள்கையையும் கடைபிடித்து அதில் வெற்றியையும் கண்டவர். ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும், எப்படிப்பட்ட பண்புகளை கடைபிடிக்க வேண்டும் என்பதை ஏழை எளிய மக்களுக்கும், படிக்காத பாமரனுக்கும் புரியும் வகையில் தன்னுடைய வசனங்கள் மூலமும், பாடல்கள் மூலமும் பதிய வைத்த ஏழை பங்காளன். வெறும் வசனத்திற்காக சொன்னது என்று இல்லாமல் தன்னுடைய படங்களில் அவர் சொன்ன அனைத்தையும் ஆட்சிக்கு வந்ததும் அதை நிறைவேற்றி மக்களின் மனங்களில் முழுமை கண்டவர்.  


 



எம்.ஜி.ஆர். தன்னுடைய சொத்து அனைத்தையும் முதியோர், மாற்றுத்திறனாளிகள், காது மற்றும் பேச முடியாத மக்களுக்கு, பள்ளிகள் கட்ட, இலவச கல்வி திட்டம், வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க, தொழில் நிலையங்கள் அமைக்க என பல நல திட்டங்களுக்காகவும் எழுதி வைத்தவர். 


நடிகர் எம்ஜிஆர் தன்னுடைய படங்களின் மூலம் கூட மக்கள் பாதை மாறிச் சென்று விட கூடாது என்பதற்காக மது அருந்துவது, சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகளில் ஒருபோதும் நடித்ததே கிடையாது. தேச பக்தி, மனித நேயம் மிக்க மனிதராக வாழ்ந்த எம்ஜிஆர் பாடல்களையும் படங்களையும் பார்த்தாலே மனதில் உள்ள குழப்பங்களுக்கும் சிக்கல்களுக்கும் ஒரு தீர்வு கிடைக்கும்.   


அனைத்து தரப்பு மக்களுக்களின் பிரதிநிதியாக விளங்கியவர் எம்ஜிஆர் என்பதை எடுத்துரைக்கும் சில படங்கள்:


தொழிலாளி:


தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில், எம்.ஏ.திருமுகம் இயக்கத்தில் 1964ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'தொழிலாளி'. போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது இப்படம். முதலாளிகளுக்கு எதிராக போக்குவரத்து தொழிலாளர்கள் செய்யும் போராட்டம், அதற்காக எம்.ஜி.ஆர் எடுத்த முயற்சிகள் மூலம் தொழிலாளர்களுக்கு வெற்றியை தேடி தருவது ஆகியவற்றின் அடிப்படையில் கதை அமைந்திருக்கும். இப்படம் எம்.ஜி.ஆருக்கு தொழிலாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது.


 



படகோட்டி :


அனைத்து தரப்பு மக்களுக்காகவும் படம் எடுத்த எம்.ஜி.ஆர், மீனவ மக்களுக்காக எடுத்த படம் தான் 1964ம் ஆண்டு டி. பிரகாஷ் ராவ் இயக்கத்தில் எம்ஜிஆர் ஒரு மீனவனாக நடித்த 'படகோட்டி' திரைப்படம். மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த இரு வேறு குழுக்களுக்கு இடையே நடக்கும் மோதலை மையமாக வைத்து உருவான இப்படத்தில் மீனவ சமுதாயத்தின் போராட்டமான வாழ்க்கையை தத்ரூபமாக நடித்திருந்தார். அதன் மூலம் மீனவ மக்கள் மனதில் நிரந்தரமாக குடியேறினார் எம்.ஜி.ஆர்.


விவசாயி :


தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் எம்.ஏ. திருமுகம் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் ஒரு விவசாயியாக நடித்த படம் 'விவசாயி'. விவசாய மக்களின் பெருமையையும், உயர்வையும் எடுத்துரைத்த இப்படத்தில் கூலி தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினை, கூட்டுப்பண்ணை விவசாயம், நவீன விவசாயம் என பல அம்சங்களையும் பற்றி பேசிய படம்.