தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவர் ஏ. பீம்சிங். கோலிவுட் சினிமாவின் அக்கால நடிகர்களின் பெரும்பாலான படங்களுக்கு பீம்சிங்தான் கதை , திரைக்கதை , வசனம் . சில படங்களை இயக்கியதோடு மட்டுமல்லாமல் அதனை தயாரிக்கவும் செய்திருக்கிறார் பீம் சிங். பீம்பாய் என பலராலும் அழைக்கப்பட்ட , தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்கிய பீம்சிங் வாழ்க்கையை இந்த தொகுப்பின் வாயிலாக ரீ-கால் செய்து பார்க்கலாம்.
 
திரைத்துறைக்கு முன்னால் :


பீம் சிங் மன்னர் குடும்ப பின்னணியை கொண்டவர். ராஜபுத்திரர்கள் என அழைப்பார்களே அந்த வம்சாவளிதான் பீம்சிங். இவரின் தந்தை அகர்சிங், தாய் ஆதியம்மாள். ஆதியம்மாள் ஆந்திராவை சேர்ந்தவர். இந்த தம்பதிகளுக்கு அக்டோபர் 15, 1924 ஆம் ஆண்டு பிறந்தவர்தான் பீம்சிங். திருப்பதியை அடுத்த ராயலசெருவு என்ற கிராமத்தில் பிறந்த பீம்சிங், சிறு வயதிலேயே பெற்றோர்களுடன் சென்னையில் குடியேறினார். சென்னை புரசைவாக்கம் எம்.சி.டி. முத்தையா செட்டியார் உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் படித்தார். படிப்பை முடித்ததும், "ஆந்திரபிரபா" என்ற தெலுங்குப் பத்திரிகையில் சிறிது காலம் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். பீம்சிங் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் , திருமணம் செய்துக்கொண்டது என்னவோ தஞ்சாவூரில்தான். பிரபல இரட்டை இயக்குநர்களான கிருஷ்ணன் - பஞ்சுவை நம்மில் பலருக்கு தெரிந்திருக்கும். இவர்களுள் கிருஷ்ணனின் தங்கையைத்தான் பீம் சிங் திருமணம் செய்துக்கொண்டார். அவரது பெயர் சோனா பாய். மைத்துனரின் உதவியுடன் சினிமாவிற்குள் நுழைந்த பீம் சிங் , ஆரம்ப நாட்களில் பஞ்சு - கிருஷ்ணன் இயக்குநர்கள் குழுவில் உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். அதே சமயம்  எடிட்டிங் துறையிலும்  சிறந்து விளங்கியிருக்கிறார். பின்நாட்களில் தமிழ் மற்றும் மலையாள நடிகை சுகுமாரி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார். 


 






உறவுகள் பேசும் திரைப்படங்கள் :


ஒரு படம்னா எப்படி இருக்கனும் தெரியுமா ? பீம் சிங் திரைப்படம் போல இருக்கனும். உறவுகளுக்கு உயிரூட்டி திரைகளில் உலாவ விட்வர் பீம் சிங்.  பீம் சிங் திரைப்படங்கள் என்றாலே குடும்பத்துட பார்க்கும் படங்களாகத்தான் இருக்கும் . ஒரு மாற்றுத்திறனாளியின் வேதனை , அண்ணன் தங்கை உறவுகள் , அண்ணன் தம்பி உறவுகள் , கல்வி ஒன்றே அறிவு கிடையாது என இக்காலத்தில் ஓங்கி ஒலிக்கும் அனைத்து கருத்துகளையும் அன்றே தனது திரைப்படங்கள் வாயிலாக உணர்த்தி காட்டியவர்.


புகழ்பெற்ற படமான பராசக்தி திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய பீம் சிங்தான்  காலங்கள் கடந்து நிற்கும் பல திரைப்படங்களை இயக்கினார் என்பது நினைவுக்கூறத்தக்கது.  1954ம் ஆண்டு எஸ்.எஸ்.ஆர். நடிக்க, கலைஞர் வசனம் எழுத ‘அம்மையப்பன்’  என்னும் திரைப்படத்தை இயக்கியிருந்தார் பீம் சிங். அதுதான் பீம்சிங்கின் முதல் படம். படம் எதிர்பார்த்த வெற்றியை பதிவு செய்யவில்லை. ஆனாலும் துவண்டு போகாத பீம் சிங் அடுத்தடுத்த படங்களுடன் களம் கண்டார். அதன் பிறகு இரண்டு வருட இடைவேளைக்கு பிறகு ராஜா ராணி என்னும் திரைப்படத்தை இயக்கினார். அந்த திரைப்படத்திற்கும் கலைஞர்தான் வசனம் . படம் மாபெரும் ஹிட். அதன் பிறகு 1958 ஆம் ஆண்டு இரண்டு படங்களை வெளியிட்டார். ஒன்று பதிபக்தி மற்றொன்று திருமணம் .இந்த திரைப்படங்களை எல்லாம் பீம்சிங்கே இயக்கி தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 




இரண்டு படங்களை வெளியிட்ட பீம்சிங் , அடுத்த ஆண்டு நான்கு படங்களை வெளியிட்டார். பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்,பாகப்பிரிவினை,சகோதரி ,பொன்னு விளையும் பூமி இவை அனைத்துமே மக்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. பீம் சிங் சினிமா கெரியரில் 1960 ஆம் ஆண்டு மிக முக்கியமானது. அந்த வருடத்தில் அவர் கொடுத்த வெற்றிப்படங்கள் இன்றளவும் கொண்டாடப்படுபவை. முதலில் சிவாஜி கணேசன் கூட்டணியில் படிக்காத மேதை , திரைப்படம் வெளியானது. அந்த திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம் முடிவதற்குள் களத்தூர் கண்ணம்மா திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். இன்று இந்திய சினிமா கொண்டாடும் நாயகனான கமல்ஹாசனை சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய பெருமை பீம்சிங்கையே சேரும். தமிழ் படங்கள் மட்டுமல்லாது இந்தி , தெலுங்கு , மலையாள மொழிகளிலும் பல படங்களை இயக்கியுள்ளார் பீம்சிங். ஆனால் அங்கும் தமிழ் சினிமாவின் சாயல் தென்படும்.


 


’ பா ’படங்கள் : 


பீம்சிங் இயக்கிய பெருமாலான படங்களின் முதல் எழுத்து ‘பா’ என்னும் எழுத்தை கொண்டே  தொடங்கியிருக்கும். பீம்சிங்கிற்கு அந்த எழுத்தின் மீது அப்படியொரு செண்டிமெண்ட். 1961 ஆம் ஆண்டு பாசமலர் ,பாவ மன்னிப்பு,பாலும் பழமும் திரைப்படத்தை தொடர்ந்து 1962 ஆம் ஆண்டு பார்த்தால் பசி தீரும் ,படித்தால் மட்டும் போதுமா, பந்த பாசம் திரைப்படங்களையும் , அதன் பிறகு பார் மகளே பார் (1963),பச்சை விளக்கு (1964), பழநி (1965) ,பாலாடை (1967),பாதுகாப்பு (1970),பாதபூஜை (1974) உள்ளிட்ட படங்கள் ‘பா’ வரிசையில் வெளியான திரைப்படங்கள்.




சிவாஜியின் ரசிகர் ! 


பீம்சிங் நான் ஒரு சிவாஜியின் ரசிகர் என ஒரு இடங்களிலும் சொல்லிக்கொண்டதில்லை. ஆனாலும் அவர் சிவாஜியை வைத்து ரசித்து ரசித்து எடுத்த படங்கள் அவர் சிவாஜியின் தீவிர ரசிகர் என சொல்லாமல் சொல்லும்.  காட்சியமைப்புகள் ஒவ்வொன்றும் சிவாஜி என்னும் கலைஞன் ஸ்கோர் செய்யும் இடமாகத்தான் இருக்கும். சிவாஜியின் நடிப்பை பயன்படுத்த எண்ணற்ற இயக்குநர்கள் அந்த காலக்கட்டத்தில் இருந்தாலும், பீம் சிங் ஒரு தனித்துவமானவர்தான். சிவாஜிதான் பீம்சிங்கை , பீம்பாய் என அழைப்பாராம். இயக்குநர் - நடிகர் என்ற உறவை தாண்டி , இருவருக்குமான நட்பு ஆழமானதாக இருந்திருக்கிறது. சிவாஜியின் நடிப்பை எப்படி பயன்படுத்திக்கொண்டாரோ அதே போல மெல்லிசை மன்னரையும் தனது படங்களில் பயன்படுத்தியிருப்பார் பீம் சிங்.  ‘மலர்ந்தும் மலராத பாதி மலர்’ பாடலும் ‘வாராயோ தோழி வாராயோ’வும் என்றும் மார்க்கண்டேயப் பாடல்கள், ‘பொன்னொன்று கண்டேன்’ ‘நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்’  என காலத்திற்கும் அழியாத பாடல்களை கண்ணதாசன் உதவியோடு உருவாக்கினார் பீம் சிங்.





வசனமும் தயாரிப்பும் ! 


உதவி இயக்குநராக களம் கண்ட பீம் சிங் , காலப்போக்கில் சினிமாவை கற்றுணர்ந்தவரானார். 30க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி தயாரித்த பீம்சிங் , சில படங்களை தயாரித்து அதற்கு வசனமும் எழுதியிருந்தார். அப்படி வெளியான திரைப்படங்கள்தான் சாது மிரண்டால் (1966),ஆலயம் (1967), பட்டத்து ராணி (1967) உள்ளிட்ட திரைப்படங்கள்.




மறைவு! 


1977-ம் ஆண்டுக் கடைசியில் பீம்சிங் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். திடீர் மாரடைப்பு காரணமாக  டிசம்பர் 30-ந்தேதி மைலாப்பூர் இசபெல்லா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால்  சிகிச்சை பலனளிக்காமல்  16-1-1978 அன்று பிற்பகல் 2-30 மணியளவில் அவர் உயிரிழந்தார். செய்தி கேட்ட சிவாஜி சொந்த ஊரான சூரக்கோட்டையில் இருந்து விரைந்து வந்தாராம். திரையுலகை சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்கள் அவரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். இவர்  உடல் மறைந்திருந்தாலும், காலத்தை கடந்து நிற்கும் அவரது திரைப்படங்கள் பீம்சிங்..பீம்சிங் என அவரது பெயரை ஓயாது ஒலித்துக்கொண்டேதான் இருக்கும்.