தமிழ் , தெலுங்கு , கன்னட மொழி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரீட்சியமானவர் நடிகை ரெஜினா. 2005ம் ஆண்டு பிரசன்னா மற்றும் லைலா நடித்த கண்ட நாள் முதல் திரைப்படத்தில் லைலாவின் தங்கையாக அறிமுகமானார். தமிழில் ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த ரெஜினா தற்போது ஒரு சில பெரிய ஹீரோக்களின் படங்களில் குத்து பாடலுக்கு நடனமாடியுள்ளார். குறிப்பாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் வெளியாகவுள்ள ஆச்சார்யா திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு ஐடம் நம்பரில் நடனமாடியிருக்கும் ரெஜினா , இதுதான் தான் கடைசியாக நடனமாடும் குத்துப்பாடல் என நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.







அதில் “ சில வருடங்களுக்கு முன்னதாக நான் சிரஞ்சீவி காருடன் ஒரு பாடலில் நடனமாடினேன். அந்த பாடலுக்கு பிறகு எனக்கு வந்த வாய்ப்புகள் அனைத்துமே ஐடம் நம்பரில் நடனமாடுவதற்காகவே வந்தது. இயக்குநர்கள் நான் ஒரு பாடலில் அப்படி நடனமாடினால் என்னால் வேறு எதுவும் செய்ய முடியாது என நினைக்கிறார்கள். நான் டைப்காஸ்ட் செய்யப்பட்டேன்.  எதிர்காலத்தில் இப்படியான நடனம் நிச்சயம் கதைக்கு தேவை என்றால் நான் செய்யலாம். ஆனால் இனிமேல் இப்படியாக நடனமாட எனக்கு நான் அழுத்தம் கொடுக்க மாட்டேன். சிரஞ்சீவி காருடன் நடனமாடுவது எனது நீண்ட நாள் ஆசை . நான் அவருடன் ஆடியதற்காக பெருமைப்படுகிறேன்.


"எனது சித்தாந்தங்கள் [பெண்ணியவாதியாக] கிளாஸ் ஆவது போல் நான் உணரவில்லை. சமீபத்தில் ஒருவர் என்னிடம் ஐடம் நம்பர் பாடலை ஸ்பெஷல் பாடலாக ஏன் எடுத்துக்கொள்ளக்கூடாது என கூறினார். நான் அதை நினைத்து கவலைப்படப்போவதில்லை. அது ஐடம் நம்பரோ அல்லது கொண்டாட்டப்பாடலோ எதுவாக இருந்தாலும் இறுதியில் நான் ஒரு நடிகைதான். எல்லாவற்றையும் நாம் கேள்வி கேட்கத் தொடங்கும் போது, ​​நமக்குப் பதில் இல்லாமல் போய்விடும். ஒரு பாடலுக்கு நடனமாடுவது, வலிமையான பெண்ணாக நடிப்பது அல்லது திரையில் கொலை செய்வது போன்ற ஒவ்வொரு காட்சியையும் ரசித்தேன். இது அனைத்தும் கலையின் ஒரு பகுதி. ஒரு நடிகராக, நான் பல விஷயங்களைச் செய்கிறேன் என்பது எனக்கு பெருமைதான்” என்றார்.