பிரபல நகைச்சுவை நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா சுயநினைவின்றி இருப்பதால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 

Continues below advertisement

இந்தியில் 1988 ஆம் ஆண்டு வெளியான தேசாப் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா 2005 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ரியாலிட்டி ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நிகழ்ச்சியான தி கிரேட் இந்தியன் லாஃப்டர் சேலஞ்சின் முதல் சீசனில் பங்கேற்ற பின் பிரபலமானார். உத்தரபிரதேச திரைப்பட மேம்பாட்டு கவுன்சிலின் தலைவராக இருந்த அவர், மைனே பியார் கியா, பாசிகர், பாம்பே டு கோவாவின் ரீமேக் மற்றும் ஆம்தானி அத்தானி கர்ச்சா ரூபாய்யா போன்ற பல இந்தி படங்களில் நடித்துள்ளார். 

இதனிடையே கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி மாரடைப்பால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவனையில் ராஜூ ஸ்ரீவஸ்தவா அனுமதிக்கப்பட்டார். அதே நாளில் அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டது. ஆனால் சுயநினைவின்றி வெண்டிலேட்டர் உதவியுடன் இருக்கும் ராஜூ ஸ்ரீவஸ்தவா நிலை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாததால் குடும்பத்தினர், ரசிகர்கள் உட்பட அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 

இதுதொடர்பாக அவரது இளைய சகோதரரும், நகைச்சுவை நடிகருமான டிபூ ஸ்ரீவஸ்தவா தெரிவிக்கையில், ராஜூ ஸ்ரீவஸ்தவா மெதுவாக குணமடைந்து வருவதாகவும் ஆனால் தொடர்ந்து சுயநினைவின்றி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் அவர் நலம் பெறுவார். இதுவரை 35 நாட்களான நிலையில், சுயநினைவின்றி இருக்கும் நிலையில்  மருத்துவர்கள் தங்களால் முடிந்ததைச் செய்கிறார்கள் எனவும் டிபூ கூறியுள்ளார். ராஜூ ஸ்ரீவஸ்தவா விரைவில் பூரண உடல் நல பெற வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.