பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், தான் பொன்னியின் செல்வன் நாவலை படிக்கும் ஆர்வம் எப்போது ஏற்பட்டது என தெரிவித்துள்ளார். 


கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.   மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்துக்கு  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  






இதனிடையே பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் பங்கேற்கின்றனர்.  மேலும் நிகழ்ச்சியில் படத்தில் இடம் பெற்ற நடிகர்,நடிகைகள் தவிர்ந்து நடிகர்கள் நாசர், காளிதாஸ் ஜெயராம், சித்தார்த்,நிழல்கள் ரவி,  இயக்குநர் மிஷ்கின், நடிகை பூர்ணிமா பாக்யராஜ், அதிதி ராவ், உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.  


அதேசமயம் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் இரவு 9 மணிக்கு வெளியாகும் என லைகா நிறுவனம் தெரிவித்த நிலையில் கிட்டதட்ட 2 மணி நேரம் தாமதமாக 11 மணிக்கு மேலே வெளியானது. பிரமாண்டமாக இருக்கும் ட்ரைலர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், அனைவருக்கு என் முதல் வணக்கம். பொன்னியின் செல்வன் புத்தகத்தின் பக்கங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கேட்டேன். பக்கங்களின் எண்ணிக்கையை கேட்டதும் அந்த பக்கம் போகவில்லை. 


ஆனால் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் பொன்னியின் செல்வன் கதையில் உள்ள வந்திய தேவன்  கதாப்பாத்திரத்தை யார் நடித்தால் நல்லா இருக்கும் என வார இதழ் ஒன்றின் மூலம் வாசகர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு அவர்  'ரஜினிகாந்த்' என ஒரு வரியில் பதில் சொல்லியிருந்தார். அதைக் கேட்டதும் எனக்கு ஒரே குஷியாக ஆனது. அன்று தான் படிக்க ஆரம்பித்தேன்.  கல்கி இன்று இருந்திருந்தால் அவர் வீடு தேடி போய் காலில் விழுந்து வணங்கி இருப்பேன் என ரஜினி தெரிவித்தார். 


இந்த படத்தில் பெரிய பழுவேட்டையர் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என மணியிடம் கேட்டேன். ஆனால் அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை. இதில் நீங்க நடிச்சிங்கன்னா.. உங்க ரசிகர்களிடம் நான் திட்டு வாங்கவா .. உங்களை இந்த மாதிரி யூஸ் பண்ண நான் விரும்பவில்லை என கூறினார். வேறு யாராக இருந்தாலும் நான் கேட்டதற்கு வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். ஆனால், மணி வேண்டாம் என சொன்னார். அது தான் மணிரத்னம் எனவும் ரஜினி புகழ்ந்தார்.