அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் 'ஜெயிலர்'. ரஜினிகாந்தின் 169 ஆவது படமான இதை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்குவது அனைவரும் அறிந்ததே. சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.


‘பீஸ்ட்’ -ன் படுதோல்விக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால் நெல்சனுக்கு இதில் வெற்றியை கொடுத்தே ஆக வேண்டும் என்கிற பிரஷ்ஷர். அதனால் ஒவ்வொரு அடியையும் மிகவும் கவனமாக எடுத்து வைத்து வருகிறார் நெல்சன். இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கவுள்ளது. இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளது. அதில் ஸ்டைலாக ரஜினி நிற்கும் உருவ அமைப்பும், இன்றைய தேதியும் குறிக்கப்பட்டுள்ளது. மேலும் காலை 11 மணியையும் குறிப்பிட்டுள்ளது. எனவே காலை படத்தின் ஷூட்டிங் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.






ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இந்தப்படத்தில், கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிப்பதை அவரே உறுதிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில் படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரியங்காமோகன், ரம்யா கிருஷ்ணன் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளாமே நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க இருப்பதாகவும், பிரியங்கா மோகன் முக்கியமான ரோலில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ரஜினியுடன் இணைந்து படையப்பாவில்  நடித்த ரம்யா கிருஷ்ணன், 20 வருடங்களுக்கு பிறகு நடிக்கவிருக்கிறார். நீலாம்பரி கதாப்பாத்திரத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன் 2002-ல் வெளியான பாபா படத்தில் சிறப்பு தோற்றத்தில்  நடித்திருப்பார். 






முன்னதாக மேடை ஒன்றில் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறோம் நெல்சன் கூறியிருந்தார். இந்த நிலையில் ஜெயிலர் படத்திற்கு முந்தைய வேலைகள் கிட்டத்தட்ட முழுமையாக முடிந்து விட்டதாம். அதன்படி இன்று ஷூட்டிங் தொடங்கவுள்ளது. ரஜினியின் அடுத்தப்படம் தொடங்கவுள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்