நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர் 2' திரைப்படம் வரும் அக்டோபர் 16 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், ஏற்கெனவே அதே நாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நடிகர் தனுஷின் 'ஓம்' திரைப்படத்தின் வெளியீடு குறித்து திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் புதிய விவாதம் உருவாகியுள்ளது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் 'ஓம்' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி சில வாரங்களுக்கு முன்பே அக்டோபர் 16 என அறிவிக்கப்பட்டிருந்தது. படத்தின் பணிகளும் அதற்கேற்ப முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அதே தேதியில் ரஜினியின் 'ஜெயிலர் 2' வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருப்பது வசூல் போட்டி குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் படங்கள் வெளியாகும் போது பெரும்பாலான தயாரிப்பாளர்கள் தங்களது படங்களை அதே தேதியில் வெளியிட தயங்குவது பல ஆண்டுகளாக இருந்து வரும் நடைமுறையாகும். திரையரங்குகளின் எண்ணிக்கை, ரசிகர்களின் பெரும் வரவேற்பு மற்றும் வசூல் ஆதிக்கம் ஆகிய காரணங்களால், ரஜினி படங்களுக்கு தனி இடம் அளிக்கும் வகையில் பல திரைப்படங்கள் தங்களது வெளியீட்டை ஒத்திவைத்த சம்பவங்கள் ஏராளம்.
கடந்த காலங்களிலும் ரஜினியின் 'ஜெயிலர்', 'அண்ணாத்த', 'தர்பார்', 'பேட்ட' உள்ளிட்ட படங்கள் வெளியாகியபோது, பல நடுத்தர மற்றும் சிறிய படங்கள் தங்களது ரிலீஸ் தேதியை மாற்றிக் கொண்டன. சில தயாரிப்பாளர்கள் நேரடி மோதலைத் தவிர்க்கும் வகையில் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்கள் தள்ளி வெளியீட்டை அறிவித்திருந்தனர். இதனால் திரையரங்குகளும் வசூலும் பாதிக்கப்படாமல் இருக்க முடிந்தது.
தனுஷ் ரசிகர்கள் ஆதங்கம்
ஓம் படத்தின் ரிலீஸ் தேதி முன்பே அறிவிக்கப்பட்டும் ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் தேதியை சன் பிக்ச்சர்ஸ் அறிவித்திருப்பது தனுஷ் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ் படத்தை ஒத்திவைக்கக் கூடாது , ஓம் திரைப்படம் நிச்சயம் சூப்பரான கமர்சியல் படமாக இருக்கும் என ரசிகக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள்.
