நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்துக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரஜினி ரசிகர்கள் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். 


“ஜெயிலர்” படம்


நடிகர் ரஜினிகாந்தின் 169-வது படமாக உருவாகியுள்ள “ஜெயிலர்” படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகமெங்கும் தியேட்டர்களில் வெளியாக உள்ளது.  நெல்சன் திலீப்குமார் இயக்கிய இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது இப்படத்தில்  ரம்யா கிருஷ்ணன், தமன்னா,யோகிபாபு, சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி, யோகிபாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. 


ஏற்கனவே   ஜெயிலர் படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் ஆகியவை  ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில்  கடந்த ஜூலை 28 ஆம் தேதி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பேசிய அனைவரின் பேச்சுகளும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளது. இதனாலேயே படத்தின் மீதான எதிர்பார்ப்பு  பல மடங்கு எகிறியுள்ளது. 


டிக்கெட் முன்பதிவு


இப்படியான நிலையில் ஜெயிலர் படத்தின் டிக்கெட் முன்பதிவு கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கியது. பொதுவாக முன்னணி நடிகர்களின் படங்களுக்கு அதிகாலை 4 மணிக்கே சிறப்பு காட்சி அனுமதி வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த பொங்கலுக்கு அஜித் நடித்த துணிவு படத்துக்கு நள்ளிரவு 1 மணி காட்சிகள் வழங்கப்பட்டது. அப்போது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சென்னையில் ரசிகர் ஒருவர் விபத்தில் உயிரிழந்தார். இதனால் அதன்பிறகு வெளியான எந்த படங்களுக்கும் சிறப்பு காட்சிக்கான அனுமதி வழங்கப்படவில்லை. பெரும்பாலும் காலை 9 மணி காட்சியே சிறப்பு காட்சியாக அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. 


இது கொஞ்சம் கூட நியாயமில்லை


இதனிடையே ஜெயிலர் படத்துக்கும் முதல் நாள் முதல் காட்சி காலை 9 மணிக்கு தான் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால் கேரளாவில் காலை 7 மணிக்கும், கர்நாடகாவில் காலை 6 மணிக்கும், மும்பையில் காலை 6 மணிக்கும் காட்சிகள் தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அந்தந்த மாநில மொழி தவிர்த்து தமிழ் மொழி படமும் காலையிலேயே திரையிடப்படுகிறது. இதனைப் பார்த்து தமிழ்நாட்டு ரசிகர்கள் குமுறி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் தங்கள் ஆதங்கங்களை வெளிப்படுத்து வருகின்றனர். 


அதேசமயம் இரண்டாம் நாளில் இருந்து காலை 6 மணிக்கே ஜெயிலர் படத்திற்கான காட்சிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது கொஞ்சம் கூட நியாயமில்லை என கவலை தெரிவித்துள்ளனர்.