ராஜமெளலி மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது இப்படத்தின் டைட்டில் குறித்தான தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.
எஸ்.எஸ்.எம்.பி 29
ஆர்.ஆர்.ஆர் படத்தைத் தொடர்ந்து தற்போது தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான மகேஷ் பாபுவின் 29 ஆவது படத்தை ராஜமெளலி இயக்கி வருகிறார். இப்படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதல் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். பிரியங்கா சோப்ரா இந்த படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். பல்வேறு நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற்று மாபெரும் சாகசக் கதையாக படம் உருவாகி வருகிறது முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் ஒரிஸாவில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பெரும்பாலான படப்பிடிப்பு காட்சிகள் கென்யாவில் நடைபெற இருக்கிறது. இதற்காக கென்யாவின் வெளியுறவுத் துறை அமைச்சக செயலாளரை இயக்குநர் ராஜமெளலி சந்தித்த்தார்
சுமார் ரூ 1200 கோடி பட்ஜெட்டில் இரு பாகங்களாக இப்படம் உருவாக இருக்கிறது. 120 நாடுகளில் இந்த படம் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை மிரளவைத்துள்ளது. இதற்கு முன்னதாக ஷாருக் கான் நடித்த ஜவான் திரைப்படம் அதிகபட்சமாக 100 நாடுகளில் வெளியானது.
படத்தின் டைட்டில்
தற்போது இப்படத்தின் டைட்டில் பற்றிய தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு வாரனாசி என டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக இணையத்தில் காட்டுத்தீ போல் தகவல் பரவி வருகிறது. இதுதான் படத்தின் நிஜமான டைட்டிலா என்பதை படக்குழுவினர் தரப்பினர் இதுவரை உறுதிபடுத்தவில்லை என்றாலும் இந்த டைட்டில் படத்தின் கதைக்கு மிக பொறுத்தமாக இருப்பதாகவே ரசிகர்கள் கருதுகிறார்கள்.
சாதனை படைக்க தயாராகும் ராஜமெளலி
ராஜமெளலி இயக்கிய பாகுபலி இரண்டாம் பாகம் திரைப்படம் உலகளவில் 1000 கோடி வசூலித்த முதல் இந்திய படமாக சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து கல்கி , புஷ்பா , ஆகிய படங்கள் 1000 கோடி வசூல் சாதனை படைத்தன. தற்போது மகேஷ் பாபு ராஜமெளலி கூட்டணி ஒட்டுமொத்த இந்திய சினிமாவுக்கே பெருமை சேர்க்கும் படமாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். மறுபக்கம் கோலிவுட் சினிமா துறையினருக்கும் , ரசிகர்களுக்கும் 1000 கோடி என்பது இன்னும் எட்டா கனியாக இருந்து வருகிறது. கங்குவா , லியோ, தி கோட் , கூலி ஆகிய படங்கள் பெரிய வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வசூலில் பெரியளவில் சாதிக்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது.