சின்னத்திரை டூ வெள்ளித்திரை பயணித்து வெற்றி பெற்ற ஏராளமானோரை நாம் கடந்து வந்துள்ளோம். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பிரிவோம் சந்திப்போம்' சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான ரச்சிதா மகாலட்சுமிக்கு முதல் வாய்ப்பே நல்ல ஒரு வரவேற்பை பெற்று கொடுத்து மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை பெற்று கொடுத்தது. 



அடுத்தடுத்து பல சீரியல்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்த வந்த நிலையில் 'சரவணன் மீனாட்சி' சீரியல் ரச்சிதாவுக்கு மிகப்பெரிய அடையாளத்தை பெற்று கொடுத்தது. நாம் இருவர் நமக்கு இருவர், நாச்சியார் என ஏராளமான தொடர்களில் நடித்து வந்தார். அந்த வகையில்தான் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில்  ஒரு போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை வெகு சிறப்பாக பயன்படுத்தி கொண்ட ரச்சிதா, பைனல்ஸ் வரை வருவார் என எதிர்பார்த்த நிலையில் தான் துரதிஷ்டவசமாக 91ம் நாள் வரை தாக்குப்பிடித்து வெளியேறினார். அதற்கு பிறகு அவரின் பப்ளிசிட்டி லெவல் பல மடங்கு பெருகியது.   


பர்சனல் லைஃப் : 


ரச்சிதாவின் கேரியர் மிக சிறப்பாக அமைந்தது என்றாலும் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. சின்னத்திரை நடிகரான தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில காலங்கள் சிறப்பாக சென்ற அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். தினேஷ் எவ்வளவு முயற்சி செய்தும் ரச்சிதாவுக்கு அவருடன் சேர்ந்து வாழ்வதில் விருப்பமில்லை என்பதை எத்தனையோ முறை வெளிப்படையாகவும் நாசூக்காகவும் தெரிவித்துவிட்டார். 



போலீஸாக ரச்சிதா :


ஏற்கனவே உப்புக் கருவாடு, மெய்நிகரே, ஃபயர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள ரச்சிதா, தற்போது 'Xtreme' என்ற படத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்து வருகிறார் ரச்சிதா. இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. போலீஸ் கெட்டப்பில் ரச்சிதா இருக்கும் புகைப்படங்களை அவரின் சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் . மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாக உள்ளது. கண்டதையெல்லாம் வைரலாக்குவதை விடுத்தது இதை வைரலாக்குங்கள் என குறிப்பு ஒன்றையும் பகிர்ந்துள்ளார் ரச்சிதா. 


ரச்சிதாவின் பதில் :


இப்படத்தின் பூஜை விழாவில் பேசிய ரச்சிதா "பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் நம் கேரியருக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் கிடையாது. நான் இதை ஏற்கனவே பல முறை சொல்லி இருக்கேன். பிக் பாஸ் நிகழ்ச்சி வாழ்க்கைப் பாடங்கள் தான் கற்றுக் கொடுக்கும். நம் வாழ்க்கையில் எப்படி இருக்கலாம், ஒரு சூழலை எப்படி கையாள்வது, மன உறுதி இவற்றையெல்லாம் தான் பிக்பாஸ் கற்றுக்கொடுக்கும். கேரியரை பிக்பாஸ் உருவாக்கிக் கொடுக்காது. நமக்குள் இருக்கும் திறமையை நாம் தான் கொண்டு வர வேண்டும்" என தெளிவாக பேசி இருந்தார் ரச்சிதா.