நடிகை சாய் பல்லவி.. அதாங்க நம்ம மலர் டீச்சரை வெட்கப்பட வைத்துள்ளார் புஷ்பா பட இயக்குநர் சுகுமார். 


பிரேமம் படத்தில் ஒரு குட்டி தமிழ்ப்பாடல் வரும். அதில், "அவள் கன்னங்கள், கண் இமைகள், சிரிப்பும்... கலந்து தந்தபோதை என்ன" என்று நிவின் பாலி சிலாகித்துப்பாட சாய் பல்லவியின் கன்னங்கள் வெட்கத்தால் சிவக்கும்.


அதே வெட்கத்தை இத்தனை ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வரச் செய்துள்ளார் புஷ்பா திரைப்பட இயக்குநர். 


அண்மையில், இயக்குநர் சுகுமார் ஒரு திரைப்பட வெளியீட்டின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் கலந்து கொண்டார். ஆடவல்லு மீக்கு ஜோஹார்லு என்ற அந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசவந்த இயக்குநர் சுகுமார், நடிகை சாய் பல்லவி என்று உச்சரித்ததுபோதும் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆர்ப்பரிக்க ஆரம்பித்தனர்.





;


இடைவிடாத உற்சாகக் குரலால், சுகுமார் பேசவே இயலாமல் திணறினார். குறுக்கிட்டு சாய் பல்லவி ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்து அமைதிகாக்குமாறு கூற வேண்டியதாயிற்று. அப்போதும் தொடர்ந்து குரல் எழுப்பினர். உடனே சாய் பல்லவி, டைரக்டர் சுகுமார் சார் சொல்லவந்ததை முழுமையாக சொல்ல விடுங்கள் என்றார்.


ஒருவழியாக கூட்டத்தினரின் உற்சாக கோஷம் அடங்கியவுடன் சுகுமார், சாய்பல்லவி லேடி பவண் கல்யாண் என்று பாராட்டினார். அப்புறமென்ன மீண்டும் உற்சாக கோஷம் எழுந்தது.


ஆடவல்லு மீக்கு ஜோஹார்லு படத்தை கிஷோர் திருமலா இயக்கியுள்ளார். இப்படம் மார்ச் 4ல் திரைக்கு வருகிறது. ரொமான்டிக் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஷர்வானந்த, ராஷ்மிகா மந்தனா, ராதிகா சரத்குமார், குஷ்பு, ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஸ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி கடந்த 27 ஆம் தேதி நடந்தது. நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.


சாய் பல்லவியும் ஷ்யாம் சிங்கா ராயும்.. டோலிவுட்டில் சாய் பல்லவிக்கு பெரிய பெயரைப் பெற்றுத் தந்தது ஷ்யாம் சிங்கா ராய் திரைப்படம். நானி இரட்டை வேடத்தில் நடிக்க ராகுல் சாகிராதித்யன் இயக்கத்தில் வெளியான “ஷ்யாம் சிங்கா ராய்”திரைப்படம் விமர்சன ரீதியாக ஆகச்சிறந்த வரவேற்பைப் பெற்றது.கோயிலில் நாட்டியமாடும் தேவதாசியான மைத்ரியாக (சாய் பல்லவி) நானிக்கு இணையான நடிப்பைத் தந்துள்ளார். அந்த நடிப்பு தான் அவருக்கு மிகுந்த வரவேற்பைக் கொடுத்துள்ளது.