அமரர் கல்கியின் பிரபலமான 'பொன்னியின் செல்வன்' நாவலை அடிப்படையாக கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கிய திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றதோடு வசூலிலும் சாதனை படைத்தது. மிகுந்த வரவேற்புக்கு மத்தியில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உச்சத்தில் உள்ளது. 



நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், சரத்குமார், ஜெயராம், விக்ரம் பிரபு, ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சோபிதா துலிபாலா என பெரிய திரை பட்டாளம் நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருந்தார். ரவிவர்மன் ISC ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள கலை இயக்குனராக பணிபுரிந்துள்ளார் தோட்ட தரணி. 


PS2  பர்ஸ்ட் சிங்கிள் :


பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலாக ஷக்தி ஸ்ரீ கோபாலன் குரலில் 'அக நக அக நக' பாடல் சமீபத்தில் வெளியாகி அனைவரின் இதயங்களையும் கொள்ளை கொண்டது. அந்த வகையில் படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ லான்ச் குறித்த  அதிகாரப்பூர்வமான தகவல் ஒன்றை தற்போது வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது லைகா நிறுவனம். 


சிறப்பு விருந்தினர் :


பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 29ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மிகவும் கோலாகலமாகவும் பிரமாண்டமாகவும் நடைபெற உள்ளது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார் உலகநாயகன் கமல்ஹாசன் என  சர்ப்ரைஸ் அறிவிப்பையும் போஸ்டர் மூலம் வெளியிட்டுள்ளது லைகா நிறுவனம்.  இந்த செய்தி திரை ரசிகர்கள் மத்தியில் ஆரவாரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விழாவில் ஒளிபரப்பு அதிகாரத்தை சன் டிவி நிறுவன கைப்பற்றியுள்ளது.