பகாசூரன் பா.ரஞ்சித்திற்கு எதிரான படம் தான் என தயாரிப்பாளர் தேனப்பன் தெரிவித்துள்ளது திரையுலகினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கிய மோகன் ஜி அடுத்ததாக பகாசூரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில்  நடிகர்கள் செல்வராகவன், ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி ஆகியோர் முதன்மை கேரக்டரில் நடிக்க,  ராதாரவி, தயாரிப்பாளர் கே.ராஜன், ராம்ஸ், சரவணன் சுப்பையா, தேவதர்ஷினி ஆகியோரும் பகாசூரனில் இணைந்துள்ளனர். சாம் சி.எஸ்.  இப்படத்திற்கு  இசையமைத்துள்ளார். இந்த படம் பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முன்னதாக படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.  இதனிடையே பகாசூரன் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் பேசிய  தயாரிப்பாளர் தேனப்பன், சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவர் தனது உரையில், “பகாசூரன் படத்துக்கு ஊடகத்தினர் சப்போர்ட் செய்ய வேண்டும். வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் இது பா.ரஞ்சித்திற்கு எதிரான படம் தான். பா.ரஞ்சித்துக்கு சப்போர்ட் செய்வது போல் ஏன் மோகன் ஜிக்கு சப்போர்ட் பண்ண மாட்டேங்குறீங்க என தெரியவில்லை. இது சமூகத்துக்கு தேவையான படம்.


அதேசமயம் ரெட் ஜெயன்ட் நிறுவனம் யாரையும் மிரட்டி எல்லாம் வாங்கவில்லை. நான் சினிமாவிற்கு வந்து 38 ஆண்டுகள் ஆகிறது. 38 வருடத்தில் எத்தனை படம் சில்வர் ஜூப்ளி பார்த்து இருப்போம். ரெட் ஜெயன்ட் உண்மையில் 5 சதவீதம் தான் வாங்குகிறார்கள். ரூ.1 கோடி வந்தால் அவர்களுக்கு ரூ.5 லட்சம் தான் கிடைக்கும்” என தெரிவித்துள்ளார். 


தொடர்ந்து பேசிய தேனப்பன், “நான் திமுக அதிமுக கிடையாது சினிமாவில் இருந்து சொல்கிறேன். அவர்களுக்கு  எதிர்ப்பு தெரிவித்து கம்பெனி கூடும் அளவிற்கு வேற மாதிரி தான் இருக்காங்க. மக்களிடம் உண்மையை சொன்னால் யாரும் நம்புவதில்லை. அவர்களுக்கு சினிமாவிற்கு உதவி தான் செய்கின்றனர். 


இத்தனை ஆண்டுகளில் யார் உண்மையை சொன்னது. தமிழ்நாட்டில் உள்ள விநியோகிஸ்தர்கள் எல்லாம் மாபியா கும்பல் தான். ஒருவர் கூட பணம் வரவில்லை என்று தான் சொல்கின்றனர். நிச்சயமாக சினிமா நல்ல இருக்க வேண்டும் என்றால் ரெட் ஜெயன்ட் போன்ற சிலர் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.