நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் மருத்துவ சிகிச்சைக்கு தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு உதவி செய்துள்ளது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.


இந்திய திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குனருமான கலைப்புலி எஸ்.தாணு, சென்னை காவேரி மருத்துவமனையில் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் 33 வயது பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளார்.


கணவனை இழந்த அந்தப்பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாக இடைநிலை நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது நுரையீரலில் காயங்கள் ஏற்பட்டுள்ளது.


தற்போது அவர் இரட்டை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கிறார். மேலும் தமிழ்நாடு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தில் (TRANSTAN) பதிவும் செய்துள்ளார்.


இந்நிலையில், தயாரிப்பாளர் வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ்.தாணு, நோயாளியின் மருத்துவ சிகிச்சைக்காக அவரது குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.


சென்னை காவேரி மருத்துவமனை மருத்துவ இயக்குநர் டாக்டர் ஐயப்பன் பொன்னுசாமி மற்றும் காவேரி மருத்துவமனையின் மனநல மருத்துவர் யாமினி கண்ணப்பன் ஆகியோர், நோயாளியின் குடும்பத்தினர் சார்பாக இந்தத் தொகையை பெற்றுக்கொண்டதோடு, கலைப்புலி எஸ் தாணுவுக்கு  நன்றியும் தெரிவித்துள்ளனர். 


காவேரி மருத்துவமனை இந்த மாற்று அறுவை சிகிச்சைக்கான மொத்த செலவை மானியமாக வழங்கியுள்ளதுடன் மேலும் பல்வேறு நன்கொடையாளர்களிடமிருந்து நிதி திரட்டவும் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.