கலிஃபோர்னியாவை அடிப்படையாக கொண்டு இயக்கும் TMZ ஆன்லைன் இதழ் தெரிவிக்கும் தகவலின்படி, ப்ரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் தம்பதிக்கு இன்று கலிஃபோர்னியாவில் வாடகைத்தாய் மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் பெயர் குறித்து ப்ரியங்கா, நிக் ஜோனஸ் ஜோடி இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது


வாடகை தாய் மூலம் குழந்தையை வரவேற்றுள்ளனர் ப்ரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் தம்பதி. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்த அறிவிப்பைப் பகிர்ந்திருக்கும் பிரபல நடிகரும், தொழிலதிபருமான ப்ரியங்கா சோப்ரா, “ வாடகைத்தாய் மூலம் எங்களின் குழந்தையை வரவேற்றிருக்கிறோம். இந்த விஷயத்தை உங்களுடன் பகிரும் இந்த நேரத்தில், இவ்விஷயத்தில் எங்களுக்கான தனிப்பட்ட நேரத்தையும், வெளியையும் தருமாறு கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் எங்கள் குடும்பத்தின் மீது கவனம் செலுத்தும் நேரம் இது. நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.






முன்னேற்றத்துக்கும், காதலுக்கும், திருமணத்துக்கும், மகிழ்ச்சிக்கும் எந்த வயதும் இல்லை என எப்போதும் நிரூபித்துக்கொண்டே இருக்கும் ப்ரியங்கா இப்போது இன்னும் அதிகமாகக் கொண்டாடப்படுகிறார். ரசிகர்களும், பாலிவுட் நட்சத்திரங்களும் ப்ரியங்கா-ஜோனஸ் இணைக்கு தங்களின் வாழ்த்து மழையைக் குவித்து வருகிறார்கள்.


பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் திருமணம் 2018-ஆம் ஆண்டும் ஜோத்பூர் அரண்மனையில் கிறிஸ்தவ முறைப்படியும், இந்து மத சடங்குகளின்படியும் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்கு முன்பு, பிரியங்கா சோப்ரா திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பெயருக்கு பக்கத்தில் இருந்த தனது கணவரின் பெயரை அகற்றியது விவாகரத்து வதந்திகள் பரவக் காரணமானது. அலுவல் ரீதியான வசதிக்காக மட்டுமே ப்ரியங்கா தனது ஒரே பெயரை பயன்படுத்த முடிவெடுத்ததாக ப்ரியங்கா சோப்ராவின் தாயார் மது சோப்ரா விளக்கமளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.