பாலிவுட் நடிகையாக இருந்து , ஹாலிவுட் வரைக்கும் புகழ்பெற்றவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் ஹாலிவுட்டின் பிரபல பாப் இசை பாடகர் நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இருவரும் இந்த வருட தொடக்கத்தில் தாங்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றோம்  என்பதை உறுதிப்படுத்தினர். இது சமூக வலைத்தளங்களில்  மிகப்பெரிய விவாதத்தை கிளப்பினாலும் கூட , ஜோடிகள் இருவரும் தங்கள் குழந்தையின்  புகைப்படத்தை  இன்னும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துக்கொள்ளவில்லை. ஆனாலும் சமூக வலைத்தளங்களில் பிரியங்கா சோப்ரா தனது  குழந்தையுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியானது.




இந்த நிலையில் பிரபல ஆங்கில நாளிதழான TMZ ஆனது நிக் ஜோனஸ் மற்றும்  பிரியங்கா சோப்ராவின்  குழந்தை பெயரை வெளியிட்டுள்ளது. இந்து மற்றும் கிருஸ்துவ முறைப்படி , இரு பெயர்களையும் இணைத்து மால்தி மேரி சோப்ரா ஜோனஸ் என பெயர் வைத்திருப்பதாக TMZ தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. ஆனாலும் இதனை ஜோடிகள் உறுதிப்படுத்தவில்லை. மால்தி மேரி சோப்ரா ஜோனஸ் பெண் குழந்தையானது கலிபோர்னியாவின் சான் டியாகோ நகரில்  ஜனவரி 15 ஆம் தேதி இரவு 8 மணிக்குப் பிறகு பிறந்ததாக கூறப்படுகிறது.  நிக் - பிரியங்கா தம்பதியினர் குழந்தையின் பெயரை இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், இந்த பெயர்  இரு  மதங்களையும் மதிக்கும் அதனை பின்பற்றும்  காதல் ஜோடிகளின் அன்பிற்கு அடையாளமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.






 


பிரியங்கா மற்றும் நிக்  ஜோனஸ் தம்பதியினர் கடந்த ஜனவரி 21 ஆம் தேதிதான் தாங்கள் வாடகை தாய் மூலம் குழந்தையை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறோம் என தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் தெரிவித்திருந்தனர்.அதன் பிறகு குழந்தை குறித்த எந்த அறிவிப்பையும் அவர்கள் பகிர்ந்துக்கொள்ளவில்லை. பிரியங்கா சமீபத்தில் தனது நெருங்கிய தோழியான லில்லி சிங்குடன் பேசும் போது ஒரு பெற்றோராக தனது புதிய பாத்திரம் எப்படியாக இருக்கிறது என்பது குறித்து மனம் திறந்திருந்தார்.அப்போது தனது குழந்தையை எந்தவொரு வரம்பும் இல்லாமல் , அவளது கனவுகளை நோக்கி பயணிக்கும் வகையில் வளர்க்க விரும்புவதாக தெரிவித்திருந்தார்.