படப்பிடிப்பின் போது இயக்குநர் பாலா தன்னை அடித்ததாக நடிகை மமிதா பைஜூ தெரிவித்துள்ளார்


வணங்கான்


இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள படம் வணங்கான். பாலாவின் தயரிப்பு நிறுவனமான பி ஸ்டுடியோஸ் மற்றும் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ்  இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில், ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மிஷ்கின், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில், வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். சமீபத்தில் இப்படத்தில் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.


படத்தில் இருந்து விலகிய சூர்யா


வணங்கான் படத்தில் முதலில் நடிகர் சூர்யா நடிக்க ஒப்பந்தம் செய்யப் பட்டிருந்தது. சூர்யா நடித்து படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இப்படியான நிலையில் படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகினார். நடிகர்களை மரியாதைக் குறைவாக நடத்தியதால் பாலாவுக்கும் சூர்யாவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் விளைவாக சூர்யா இப்படத்தில் இருந்து விலகியாதாக தகவல்கள் வெளியாகின. சூர்யா இப்படத்தில் இருந்து விலகியது மட்டுமில்லாமல் மலையாள நடிகை மமிதா பைஜூவும் இப்படத்தில் இருந்து விலகினார். பாலாவின் மேல் பொதுவாக வைக்கப் படும் குற்றச் சாட்டுகளில் ஒன்று அவர் தனது நடிகர்களை அடித்து துன்புறுத்துவது. பரதேசி படத்தின் போது அவர் நடிகர்களை அடிப்பதும் கெட்ட வார்த்தையில் திட்டும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது


மலையாளத்தில் சூப்பர் ஷரன்யா படத்தின் மூலம் பரவலாக அறியப்பட்ட நடிகை மமிதா பைஜூ. சமீபத்தில் வெளியான பிரேமலு படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ளார். மமிதா பைஜூ அளித்த பேட்டி ஒன்றில் வணங்கான் படத்தின் படப்பிடிப்புன் போது இயக்குநர் பாலா தன்னை அடித்ததாக கூறியுள்ளது ரசிகர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.


பாலா பின்னால் இருந்து அடித்தார்






மமிதா பைஜூ கூறியதாவது: வணங்கான் படத்தில் வில்லடிச்ச மாடன் என்கிற ஒரு காட்சி இருந்தது. இந்த காட்சியில் நான் ஒரு டிரம்ஸ் மாதிரியான வாத்தியத்தை அடித்தபடி பாடிக் கொண்டே ஆடவேண்டும். எனக்கு பயிற்சி எடுத்துக் கொள்ள போதுமான நேரம் கிடைக்கவில்லை. மூன்று டேக் எடுத்துக் கொண்டப்பின்னும் எனக்கு சரியாக வரவில்லை. எனக்கு பின் இருந்த பாலா எனது தோள்பட்டையில் அடித்தார்” அவர் கூறியுள்ளார். இதனால் இயக்குநர் பாலாவை நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.