மறைந்த தேமுதிக தலைவரும், கணவருமான விஜயகாந்த் உருவத்தை கையில் பச்சைக்குத்தியுள்ளார் பிரேமலதா விஜயகாந்த். 


தமிழ் சினிமாவில் அனைவரும் விரும்பும் ஒரு நடிகராக விஜயகாந்த் இருந்துள்ளார். ஒவ்வொரு கலைஞரும் விரும்பும் ஒரு நடிகராக இருந்த விஜயகாந்த் தேமுதிக என்ற கட்சியை தொடங்கி அதிலும் அதிரடி காட்டி வந்தார். விரைவில் எதிர்கட்சியாக தனது அரசியல் பயணத்தில் உச்சம் தொட்ட விஜயகாந்த், கடந்த சில ஆண்டுகளாக உடல்நல பாதிப்பு ஏற்பட்டு நடக்க முடியாமலும், பேச முடியாமலும் கஷ்டப்பட்டார். கடந்த ஆண்டின் இறுதியில் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த், டிசம்பர் மாதம் 28ம் தேதி மறைந்தார். அவரது மறைவு அரசியல் கட்சியிலும், திரைத்துறையிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


விஜயகாந்த் உடலுக்கு கட்சி தொண்டர்களும், ரசிகர்களும், பிரபலங்களும், தலைவர்களும் 2 நாட்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் உடல் தேமுதிக அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதன்பின்னர், விஜயகாந்தின் நினைவிடத்திற்கு செல்லும் திரை பிரபலங்களும், பொதுமக்களும் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தி வந்தனர். அதேநேரம், விஜயகாந்த் பெயரில் அன்னதானம் செய்வது உள்ளிட்ட பணிகளில் பிரேமலதாவும், அவரது மகன்களும் ஈடுபட்டு வந்தனர். 


விஜயகாந்த் என்றும் மறையாமல் தன்னுடன் வாழ்ந்து வருவதாக குறிப்பிட்ட பிரேமலதா விஜயகாந்த் அவரது நினைவிடம் ஒரு கோவிலை போல் பராமரிக்கப்படும் என்றார். இந்த நிலையில் விஜயகாந்த் என்றுமே தன்னுடன் இருக்கும் விதமாக டாட்டூ குத்தியுள்ளார் பிரேமலதா. விஜயகாந்தின் உருவத்தை தனது வலது கையில் பச்சைக் குத்தியுள்ளார் பிரேமலதா. சிரித்தப்படி விஜயகாந்த் இருக்கும் புகைப்படத்தை கையில் பச்சைக் குத்திய பிரேமலதாவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.






விஜயகாந்த் உடல் அவரது கையில் அணிந்திருந்த மோதிரத்துடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார்.