தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகராக வலம் வருபவர் பிரகாஷ்ராஜ். இவர், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது, மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். மேலும், தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இயக்குனரான “துருவங்கள் பதினாறு” படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ”மாறன்” என்ற திரைப்படத்திலும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.


 






இந்த படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் நடிகர் தனுசுடன் பிரகாஷ்ராஜ், பாரதிராஜா ஆகியோரும் இணைந்து நடிக்க உள்ளனர். இந்த நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது,  நடிகர் பிரகாஷ்ராஜ் படப்பிடிப்பின்போது திடீரென தவறி கீழே விழுந்தார். இதனால், அவருக்கு சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக படப்பிடிப்பு தளத்தில் இருந்து அவர் ஹைதராபாத்திற்கு விமானம் மூலம் சென்றார். அங்கு, அவர் தனது நண்பரும், மருத்துவருமான குருவாரெட்டியிடம் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். பின்னர், பூரண நலம் பெற்றார். இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரகாஷ்ராஜ், தற்போது நலமாக உள்ளதாகவும், யாரும் கவலையடைய வேண்டாம் என்றும் பதிவிட்டுள்ளார்.