கல்கி 2898 AD


வைஜயந்தி மூவிஸ் தயாரிப்பில் நாக் அஸ்வின் இயக்கியுள்ள  படம் கல்கி 2898 . பிரபாஸ் , அமிதாப் பச்சன் , தீபிகா படூகோன் , கமல்ஹாசன் , திஷா பதானி , பசுபதி , அன்னா பென் , ஷோபனா  உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் ஜூன் 27-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.


புராணக் கதை  வைத்து சைன்ஸ் ஃபிக்‌ஷன் படமாக உருவாகியுள்ள கல்கி படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.600 கோடி. பிரபாஸ் நடிப்பில் ரூ.500 கோடி பொருட்செலவில் உருவான ஆதிபுருஷ் படம் வசூல் ரீதியாக தோல்வியை தழுவியது. இதனைத் தொடர்ந்து சலார் படமும் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. இப்படியான நிலையில் கல்கி படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு குவிந்துள்ளது. கடந்த ஒரு மாத காலமாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளில் தீவிரமாக உள்ளனர் படக்குழுவினர். 


டிக்கெட் விலையை அதிகரித்த படக்குழு


கல்கி படத்திற்கு தெலுங்கு , மற்றும் இந்தி  ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. தெலுங்கு ரசிகர்களிடையே படத்திற்கு அதிகப்படியான வரவேற்பு இருக்கும் காரணத்தினால் தெங்கானாவில் அதிகாலை 5:30 மணிக்கு முதல் காட்சியை தொடங்குவதற்கான அனுமதியை தெலங்கானா அரசிடம் பெற்றுள்ளது படக்குழு. மேலும் திரையரங்குகளில் காட்சியை அதிகரிக்கவும்  டிக்கெட் விலையை அதிகரிக்கவும் திரையரங்க உரிமையாளர்களுக்கு தெலங்கானா அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி படம் வெளியாகிய முதல் 8 நாளைக்கு தனித்திரையரங்குகளில் ஒரு டிக்கெட்டின் விலையில் 70 ரூபாயும் மல்ட்டிபிளக்ஸில் ஒரு டிக்கெட்டின் விலை 100 ரூபாயும் அதிகரித்துள்ளது.






டிக்கெட் விலை 2300


மற்ற மாநிலங்களில் ஒரு டிக்கெட்டின் விலை சராசரியாக 100 முதல் 1100 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப் பட்டுள்ளது.  மும்பையில் அதிகபட்சமாக ஒரு டிக்கெட்டின் விலை 2300 ரூபாய் நிர்ணயிக்கப் பட்டுள்ளது . மும்பையில் உள்ள பெரும்பாலான மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில்  வரி இல்லாமல்  2300 முதல் 1760 , 1560 வரை விலை உயர்த்தப் பட்டுள்ளது.


ஆத்திரமடைந்த ரசிகர்கள்


டிக்கெட் விலை அதிகரித்துள்ளது சினிமா ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் வசூலை அதிகரிக்க வேண்டும்  என்பதற்காக டிக்கெட் விலையை உயர்த்துவது சரியான முடிவு இல்லை என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக இந்த மாதிரியான நடவடிக்கை மக்கள் திரையரங்கத்தில் படம் பார்ப்பதை தவிர்த்து செல்ஃபோனில் தரவிரக்கி பார்ப்பதை ஊக்குவிக்கும் என்று சினிமா ஆர்வலர்கள் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்கள்.