பிரபாஸ்


பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின் நடிகர் பிரபாஸ் இந்தி , தமிழ் , தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வரத்தொடங்கினார். இதனைத் தொடர்ந்து இந்தியில் அவர் நடித்த சாஹோ படம் பெரியளவில் வெற்றிபெற்றது. அடுத்தபடியாக வெளியான ராதே ஷியாம் , ஆதிபுருஷ் உள்ளிட்ட படங்கள் தோல்வியை சந்தித்ததும் பிரபாஸின் மார்கெட் சரியத் தொடங்கியது.


கடந்த ஆண்டு வெளியான சலார் படம் ஓரளவிற்கு கைகொடுத்த நிலையில் இந்த ஆண்டு வெளியான கல்கி திரைப்படம் சரிந்த பிரபாஸின் மார்கெட்டை மீண்டும் உச்சத்தில் நிறுத்தியுள்ளது. கல்கி திரைப்படம் உலகளவில் 1000 கோடி வசூல் எடுத்து இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருந்து வருகிறது. இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


தற்போது பிரபாஸ் ராஜா சாப் , ஸ்பிரிட் உள்ளிட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படங்களுக்குப் பிறகு சீதா ராமம் படத்தின் இயக்குநர் ஹனு ராகவாபுடி இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன


மீண்டும் ஒரு வரலாற்று கதையில் பிரபாஸ்






சீதா ராமம் படத்தின் மூலமாக தமிழ் , தெலுங்கு , இந்தி ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தவர் ஹனு ராகவாபுடி. சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் நடக்கும் ஒரு காதல் கதையை கிளாசிக் பாணியில் இயக்கியிருந்தது சீதா ராமம் படத்திற்கு பரவலாக கவனத்தைப் பெற்று தந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது தனது அடுத்த படத்தை பிரபாஸை வைத்து எடுக்க இருக்கிறார். தனது முதல் படத்தைப் போலவே இந்த படத்தின் கதையும் 1940-களில் நடக்கும் கதை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 1940-களில் இருந்த ஒரு மிகப்பெரிய நாயகனாக பிரபாஸ் இப்படத்தில் நடிக்க இருக்கிறார்.


மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என படக்குழுவினர் போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளார்கள். இந்த தகவல் பிரபாஸ் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது