பூவே உனக்காக படம் வெளியாகி இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அப்படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்த அஞ்சு அரவிந்த் என்ன ஆனார் என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. அதுபற்றி நாம் இந்த செய்தியில் காணலாம்.


விக்ரமன் இயக்கத்தில் நடிகர் விஜய், நடிகை சங்கீதா, நாகேஷ், நம்பியார், ஜெய்கணேஷ், சார்லி, மலேசியா வாசுதேவன், மீசை முருகேசன் உள்ளிட்ட பலரும் நடித்த படம் “பூவே உனக்காக”. எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்த இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்திருந்தது. இந்த படம் விஜய்க்கு முதல் பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்தது. மேலும் அவருக்கு அதிகப்படியான பேமிலி ஆடியன்ஸ் அமைய காரணமாகவும் அமைந்தது. 


இந்த படத்தின் மூலம் மலையாள நடிகை அஞ்சு அரவிந்த் மிக முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். 1995 ஆம் ஆண்டு சுரேஷ் கோபி நடித்து மலையாளத்தில் வெளியான அக்‌ஷரம் படத்தில் அஞ்சு அரவிந்த் நடித்திருந்தார். இப்படத்தில் நாட்டியப் பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்த அவர் பார்வதி பரிநாயம், சுந்தரி நீயும் சுந்தரன் நானும் உள்ளிட்ட பல மலையாளப் படங்களில் நடித்தார். அவரை பூவே உனக்காக படத்திற்காக  விக்ரமன் தமிழுக்கு அழைத்து வந்தார். 






முதல் படமாக அஞ்சுவுக்கு நல்ல விசிட்டிங் கார்டாக அமைந்தது என சொல்லலாம். அந்த படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் ஒன்ஸ்மோர், ரஜினியுடன் அருணாச்சலம், ராம்கியுடன் எனக்கொரு மகன் பிறப்பான், விஜயகாந்துடன் வானத்தைப்போல, வாஞ்சிநாதன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தார். 


பின்னர் மலையாளப்பக்கம் சென்ற அவர் அதன்பிறகு தமிழில் நடிக்கவேயில்லை. 2002 ஆம் ஆண்டு தனது மாமா தேவராஜன் என்பவரை திருமணம் செய்த அஞ்சு அரவிந்த்  அடுத்த 2 ஆண்டுகளிலேயே அவரை பிரிந்தார். அதுவும் திருமணம் நடந்த நாளிலேயே அவர் விவாகரத்து செய்துக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


சினிமாவை தொடர்ந்து சீரியல்களில் தலைகாட்டிய அஞ்சு 2006 ஆம் ஆண்டு பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் வினய் சந்திரனை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறார். இவர் சமீபத்தில் தன் குடும்பத்துடன் இருக்கும் படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருந்தார். இன்று பூவே உனக்காக படம் வெளியாகி 27 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில அவரை ரசிகர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர்.