நடிகை நயன்தாராவை மிஞ்சி, தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்குபவர் எனும் அந்தஸ்தை பூஜா ஹெக்டே எட்டிப்பிடித்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.


தமிழில் முதல்படம்




இயக்குனர் மிஷ்கினின் முகமூடி படத்தின் மூலம் 2012ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. முதன் முதலில் இவர் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான நிலையில், முதல் படமான ‘முகமூடி’ விமர்சனரீதியாக பாராட்டுகளைப் பெற்றாலும் வணிகரீதியாக பெரும் தோல்வியைத் தழுவியது.


இதனையடுத்து கோலிவுட்டில் பூஜா கண்டுகொள்ளப்படாமல் சென்ற நிலையில், இந்தி, தெலுங்கு திரை உலகுக்குள் பூஜா அடியெடுத்து வைத்தார்.


கைக்கொடுக்காத இந்தி, கொண்டாடும் ’மணவாடு’ ரசிகர்கள்


தொடர்ந்து நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் ஜோடியாக அவர் இந்தியில் அறிமுகமான ’மொகஞ்சதாரோ’ படமும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. எனினும் தெலுங்கில் இவ்வாறான தோல்விகளை சந்திக்காத பூஜாவை தெலுங்கு ரசிகர்கள் ரசிக்கத் தொடங்கினர்.


அதனைத் தொடர்ந்து டோலிவுட்டில் தன் கோட்டையை விஸ்தாரித்த பூஜா ஹெக்டே, கிட்டத்தட்ட அனைத்து உச்ச நட்சத்திரங்களுடனும் இணைந்து நடிக்கத் தொடங்கினார்.


உச்ச நடிகையான ’புட்ட பொம்மா’




முன்னதாக அல்லு அர்ஜூனுடன் இவர் இணைந்து நடித்த ’அல வைக்குந்தபுரம்லோ’ படமும் அப்படத்தில் இடம்பெற்றிருந்த ’புட்ட பொம்மா’, ’ராமுலோ ராமுலா’ உள்ளிட்ட பாடல்களும் இவருக்கு உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்தன.


அதனைத் தொடர்ந்து விஜயின் ’பீஸ்ட்’ படத்தின் மூலம் பூஜா ஹெக்டே மீண்டும் கோலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.


தான் அறிமுகமாகி ராசியில்லாத நடிகை என முத்திரை குத்தப்பட்ட கோலிவுட்டில் தற்போது மீண்டும் இன்று கோலோச்சத் தொடங்கியுள்ளார் பூஜா ஹெக்டே.


விஜயுடன் மீண்டும் ஜோடி?




தற்போது இந்தியில் ரன்வீர் சிங்குடன் ’சர்க்கஸ்’, சல்மான் கானுடன் ’கபி ஈத் கபி திவாலி’, தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் ’ஜன கண மண’ ஆகிய படங்களில் பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.


மேலும், முன்னதாக வெளியான பீஸ்டில் விஜயுடனான இவரது ஆன்ஸ்க்ரீன் கெமிஸ்ட்ரியும், ஜோடிப் பொருத்தமும் அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், விஜயின் வரவிருக்கும் படங்களில் பூஜா மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இப்படி தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் பூஜா வெற்றிநடை போட்டு வரும் நிலையில், தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக பூஜா ஹெக்டே உருவெடுத்துள்ளார் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன.


நயனை மிஞ்சிய பூஜா ஹெக்டே!




தென்னிந்திய நடிகைகளில், 'லேடி சூப்பர் ஸ்டார்' என அழைக்கப்படும் நயன்தாரா தான் இதுவரை அதிக சம்பளம் பெறுபவராகத் திகழ்ந்துள்ளார். நடிகை நயன்தாரா தற்போது நான்கு கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார்.


இந்நிலையில், நயனை மிஞ்சும் அளவுக்கு தற்போது தன் சம்பளத்தை 5 கோடி ரூபாயாக பூஜா உயர்த்தியுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.


மேலும், தன் சம்பளத்தில் பூஜா 4 கோடி ரூபாய் தான் பெறுவதாகவும், மீதி 1 கோடி ரூபாயை அவரது உதவியாளர்கள் பெறுவதாகவும் தகவல்கள் வந்துள்ளன.


தோல்வி நடிகையாகக் கருதி ஓரம்கட்டப்பட்ட பூஜா ஹெக்டேவின் இந்த வளர்ச்சியைப் பார்த்து தற்போது கோலிவுட் வட்டாரம் வாயடைத்துப் போயுள்ளது.