பொன்னியின் செல்வன் ப்ரொமோஷன் பணிகளுக்காக நடிகர்கள் கார்த்தி, விக்ரம், நடிகை த்ரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் டெல்லி பயணித்துள்ள புகைப்ப்படம் வெளியாகியுள்ளது.


எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கியுள்ள திரைப்படமான பொன்னியின் செல்வன் முதல் பாகம் சென்ற ஆண்டு வெளியாகி, மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது.


வரும் ஏப்ரல் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாக உள்ள நிலையில் அதற்கான ப்ரொமோஷன் பணிகளில் சென்ற ஆண்டைப் போலவே முழு வீச்சில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.


பிரமாண்டமான முறையில் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் 2 படத்துக்கான ப்ரொமோஷன் பணிகளுக்காக இந்தியா முழுவதும் படக்குழுவினர் முக்கிய நகரங்களுக்குச் செல்கின்றனர்.


கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி பொன்னியின் செல்வன் ஆந்தம் வெளியீட்டு விழாவுடன் பொன்னியின் செல்வன் 2 படத்துக்கான ப்ரொமோஷன் பணிகளை படக்குழுவினர் தொடங்கினர்.


அதனைத் தொடர்ந்து நேற்று முன் தினம் (ஏப்.16) கோவையில் படக்குழு ப்ரொமோஷனில் ஈடுபட்ட நிலையில், நேற்று (ஏப்.17) படக்குழுவினர் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.


அந்த வகையில் இன்று பொன்னியின் செல்வன் படக்குழுவினர் தலைநகர் டெல்லியில் ப்ரொமோஷன் பணிகளில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில், டெல்லி சென்றிறங்கிய படக்குழுவினரின் புகைப்படத்தை லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் பகிர்ந்துள்ளது.


முந்தைய ப்ர்மோஷன் பணிகளில் நடிகை ஷோபிதா கலந்துகொள்ளாத நிலையில், தற்போது ஷோபிதாவும் கலந்துகொண்டுள்ளார். இதேபோல் மும்பையில் நடைபெறவிருக்கும் ப்ரொமோஷன் விழாக்களில் நடிகை ஐஸ்வர்யா ராய் கலந்துகொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


டெல்லியைத் தொடர்ந்து கொச்சி, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, திருச்சி மீண்டும் சென்னை என தொடர்ந்து இந்தியாவின் முக்கிய நகரங்களில் ப்ரொமோஷன் பணிகளில் பொன்னியின் செல்வன் படக்குழுவினர் ஈடுபட உள்ளனர்.






சென்ற ஆண்டு செப்டெம்பர் 30ஆம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயம் ரவி,ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயராம்,  சரத்குமார், ரகுமான், பார்த்திபன், ஷோபிதா, விக்ரம் பிரபு, பிரபு, லால், ஜெயசித்ரா,நாசர், கிஷோர்  என பெரும் நட்சத்திரப் பட்டாளமே  நடித்திருந்தனர்.  


லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் பான் இந்தியா திரைப்படமாக வெளியான பொன்னியின் செல்வன் சுமார் 500 கோடி வரை வசூலித்து சென்ற ஆண்டின் மாபெரும் ஹிட் படமாக அமைந்தது.


தொடர்ந்த இந்த ஆண்டு சம்மர் ஸ்பெஷலாக பொன்னியின் செல்வன் 2 வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அதன்படி வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி படம் வெளியாகிறது.