’பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.


பிரம்மாண்ட டீசர்


மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.


படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முன்னதாக இப்படத்தின் டீசரை தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் கடந்த ஜூலை 8 ஆம் தேதி வெளியிட்டது.  தமிழ்நாடு தாண்டி பிறமொழி ரசிகர்களிடையும் இந்த டீசர் பெரும் வரவேற்பைப் பெற்றது.


 






முதல் பாடல் ரிலீஸ்


ஜூலை மாதம் தொடங்கி பொன்னியின் செல்வன் பட அப்டேட்களை தொடர்ந்து வழங்கி படக்குழு மகிழ்வித்து வரும் நிலையில், இப்படத்தின் முதல் பாடல் வரும் ஜூலை.31ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.


இதற்கான அறிவிப்பு போஸ்டரில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிக்கும் கார்த்தி இடம்பெற்றுள்ள நிலையில், வந்தியத்தேவனுடன் ஆடித் திருநாள் கொண்டாட்டம் என்றும், பாடலின் பெயர் ’பொன்னி நதி’  என்றும் போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொன்னியின் செல்வன் நாவம் ’புதுவெள்ளம்’ எனும் அத்தியாயத்துடன் ஆடிப்பெருக்கு நாளை மையமாகக் கொண்டு வந்தியத்தேவனுடன் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


முந்தைய அப்டேட்கள்




கடந்த ஜூலை 16 ஆம் தேதி தமிழர்களின் பொற்கால வரலாற்றை வரலாற்றாசிரியர்கள், எழுத்தாளர்கள், வல்லுநர்கள் சொல்வது போல ஒரு வீடியோ வெளியானது. இதனையடுத்து சோழர் காலத்தைப் பற்றி பல தகவல்கள் அடங்கிய வீடியோவும், அருண்மொழிவர்மன் எப்படி ராஜராஜ சோழனாக மாறினார் என்பது தொடர்பான தகவல்கள் அடங்கிய வீடியோவும்  முன்னதாக வெளியாகி வரவேற்பைப் பெற்றன.


2 பாகங்களாக உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படம்  டீசர் வெளியிட்டு விழாவும் அன்றைய தினம் பிரமாண்டமாக சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள ட்ரேட் சென்டரில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய இயக்குநர் மணிரத்னம் கிட்டதட்ட 40 ஆண்டுகளாக இந்நாவலை மறக்காமல் நினைவில் வைத்திருக்கிறேன் என்றும், இதனை படமாக்க  3 தடவை முயன்றுள்ளேன் எனவும் தெரிவித்திருந்தார்.