நடிகர் விஜயகாந்த் எனக்கு கடவுள் மாதிரி என்று மனம் உருகி பேசியுள்ளார் நடிகர் பொன்னம்பலம்.


தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிப் படங்களிலும் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்து வைத்திருப்பவர் நடிகர் பொன்னம்பலம். கடைசியாக அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பின்னர் அவருக்கு உடல்நலனில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. கடுமையான நிதி நெருக்கடி, மருத்துவ சிகிச்சை எனப் போராடிய அவருக்கு தமிழ் திரையுலகினர் மட்டுமல்லாது தெலுங்கு திரையுலகினரும், கன்னட திரையுலகினரும் உதவி செய்திருந்தனர். இந்நிலையில் பொன்னம்பலம் தனக்கு உதவி செய்தவர்களை நினைவுகூர்ந்து நன்றி தெரிவித்துள்ளார். ஒரு யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து:


விஜயகாந்த் எனக்கு கடவுள்:


நடிகர் விஜயகாந்த் எனக்கு கடவுள் மாதிரி. அவர நான் இன்னும் நேரா சென்று பார்க்கவில்லை. அவர் இப்போது இருக்கும் உடல்நிலையில் அவரை நேரில் பார்த்தால் நான் செத்துவிடுவேன். ஏன்னா எனக்கு கொஞ்ச நாளா இதய நோய், சிறுநீரக நோய் இருக்கு. அவரைப் பார்த்தால் என் மனசு தாங்காது. ஒருத்தர் மேல பாசம் வைத்துவிட்டு அதுவும் அளவு கடந்த பாசம் வைத்துவிட்டாள் அவர்கள் உடல்நிலை மோசமாக இருக்கும்போது பார்க்க முடியாது. அதனால் தான் நான் அவரைப் பார்க்கவில்லை. விஜயகாந்த் நேர்மையானவர். அவர் தெய்வம். எல்லோருக்கும் உதவுக்கூடியவர். அவரு இப்போ நல்ல உடல் நலத்தோடு இருந்திருந்தால் அவர் தான் எனக்கு முதல் நபராக உதவியிருப்பார். என் வீட்டில் விஜயகாந்த் படம் மட்டும் தான் இருக்கு. அவர் என்னைக்கும் நல்லா இருக்கணும்.


சரத்குமார் சார்தான் வாடகையே கொடுத்தார்:
எனக்கு கிட்னி ஃபெய்லியர் என்று தெரிந்தவுடன் சரத்குமார் சாருக்கு தான் ஃபோன் பண்றேன். உடனே அவர் யோசிக்காம உதவினார். 6 மாசங்களுக்கு மேல் வீட்டு வாடகை கொடுத்தார். இன்னிக்கு வரைக்கும் அவர் தான் என்னை அண்டர்டேக் பண்ணியிருக்கிறார். ஒரு கட்டத்தில் நான் முழுவதுமாக வாஷ் அவுட் ஆகியிருந்தேன். என்னை கைதூக்கிவிட்டார்.


தனுஷ் என் மானத்தை காப்பாற்றினார்:


அப்புறம் தனுஷ் பற்றி நான் சொல்லியே ஆகணும். சரியான நேரத்தில் என் மானத்தை காப்பாற்றியவர். எனக்கு பேருதவி செய்தவர். அவரையும் எனக்கு உதவிய அனைவரையுமே நான் மகான் என்று தான் சொல்வேன். அதுபோல் பிரகாஷ் ராஜ் சார். ஒரு ஃபோன் தான் செய்தேன். என்னாச்சு பொன்னம்பலம் என்றார். ரேலா மருத்துவமனையில் இருக்கேன் என்றேன். உடனே ரூ.2 லட்சம் கொடுத்தார். 




சிரஞ்சீவி பெரிய மனிதர்:


தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியை பற்றி பேசியே ஆக வேண்டும். அவருக்கு நான் ஒரு முறை பிறந்தநாள் வாழ்த்து அனுப்பினேன். அதைப் பார்த்துவிட்டு அவர் எனக்கு தமிழில் நன்றி சொல்லியிருந்தார். அப்புறம் என் உடல்நிலை பாதிக்கப்பட்டதை அறிந்து ரூ.2 லட்சம் பணம் அனுப்பி உதவினார். அதுபோல் ஒரு ஆடியோ மெசேஜும் அனுப்பினார். எப்போது வேண்டுமானாலும் நீங்கள் எனக்கு உதவி செய்யலாம் என்று கூறி என்னை வாழ்த்தியிருந்தார். அவர் பெரிய மனிதர்,


இவ்வாறு பொன்னம்பலம் நன்றி மறவாமல் பெரிய லிஸ்ட்டே கொடுத்தார்.