சிலம்பரசன் நடித்துள்ள  ‘பத்துதல’  படம் தொடர்பான  புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 


                               


 




இந்தப்படங்கள் ஒரு பக்கம் வைரலாகிக்கொண்டிருக்க, நடிகர் சிலம்பரசன் கர்நாடகாவில் நடந்து கொண்டிருந்த  ‘பத்துதல’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக கூறி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு,  புகைப்படம் ஒன்றை  பதிவிட்டு இருக்கிறார். 


 


 






நீண்ட இடைவெளிக்குப் பின் நடிகர் சிம்பு தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். கடந்தாண்டு வெளியான  ‘மாநாடு’ படத்திற்கு பிறகு அவர் நடிப்பில் சமீபத்தில் மஹா படம் வெளியாகியிருந்தது. இதனையடுத்து சிம்பு நடிப்பில்  ‘வெந்து தணிந்தது காடு’ படம் வெளியாகி இருந்தது. இந்தப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், அந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சிலம்பரசனுக்கு காரும், படத்தின் இயக்குநர் கெளதம் மேனனுக்கு பைக்கும் பரிசளித்தார்.


 






தற்போது சிலம்பரசன் பத்து தல ஷூட்டிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தப்படத்தை சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய கிருஷ்ணா இப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஏற்கனவே இப்படம் டிசம்பர் 14 அன்று வெளியாகும் என ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தெரிவித்து இருந்தது. 


 


இதற்கிடையில் உடல் நலக்குறைவால் தந்தை டி.ராஜேந்தரின் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றதால் பத்து தல படத்தின் சிம்புவின் காட்சிகள் படமாக்குவது தாமதமானது.சமீபத்தில் சென்னை திரும்பிய அவர் கடந்த மாத இறுதியில்  ‘பத்து தல’ படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.


இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பெல்லாரியில் நடைபெற்று வந்த ‘பத்து தல’  படத்தின் ஷூட்டிங் முடிந்ததாக இயக்குநர் கிருஷ்ணா சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் உடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டார். இதனிடையே சிலம்பரசன் ஷூட்டிங்கில் இருந்து பாதியில் கிளம்பியதால்தான் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இந்தத்தகவலை படத்தின்  இயக்குநர் கிருஷ்ணா மறுத்து விளக்கம் அளித்து, படத்துன் ஷூட்டிங் நிறுத்தப்படவில்லை, அடுத்ததாக மதுரை மற்றும் கன்னியாகுமரியில் படப்பிடிப்பு நடத்த இருப்பதாக கூறினார்.