பத்து தல படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இறுதி நாள் கொண்டாட்ட நிகழ்வின் புகைப்படங்களை தன் சமூக வலைதளப் பக்கத்தில் நடிகர் சிம்பு பகிர்ந்துள்ளார்.


நீண்ட இடைவெளிக்குப் பின் கடந்த ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது.


தொடர்ந்து அதே உற்சாகத்துடன் மஹா, வெந்து தணிந்தது காடு என அடுத்தடுத்து படங்களில் நடித்த சிம்பு,  சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய கிருஷ்ணாவின் படத்தில் கமிட் ஆனார்.


கவுதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடிக்கும் நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.


முன்னதாக இப்படம் டிசம்பர் 14 அன்று வெளியாகும் என ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால் இதனிடையே உடல் நலக்குறைவால் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தரின் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றதால் பத்து தல படத்தின் சிம்புவின் காட்சிகளை படமாக்குவது தாமதமானது. 


கர்நாடகா மாநிலம், பெல்லாரி, தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, கேரளா உள்ளிட்ட பல பகுதிகளில் இப்படத்தின் ஷூட்டிங் முன்னதாக நடைபெற்று வந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. 


 






இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தின் இறுதி நாளில் கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படங்களை தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து சிம்பு படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.