95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த பாடல் பிரிவில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் கைப்பற்றியுள்ளது. 


உலக சினிமாவின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா  அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்  இன்று நடைபெற்றது. மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும் நிலையில் இதில் இந்தியாவில் இருந்து 3 பிரிவுகளில் படங்கள் போட்டியிட்டது. 


அதன்படி சிறந்த பாடல் பிரிவில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம் பெற்ற  நாட்டு நாட்டு பாடலும், ஆவணப்படம் பிரிவில்  The Elephant Whisperers படமும், Documentary Feature Film பிரிவில் All That Breathes படமும் போட்டியிட்டது. 


இதில் All That Breathes படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து மீதமுள்ள 2 பிரிவுகளில் ஆஸ்கர் விருது கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இதில் The Elephant Whisperers படம் ஆஸ்கர் விருதை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து சிறந்த பாடலுக்கான பிரிவில்  நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. இதற்கான விருதை பாடலாசிரியர் சந்திரபோஸூம், இசையமைப்பாளர் கீரவாணியும் பெற்றுக் கொண்டனர். 


முன்னதாக இப்பாடல் விழா மேடையில் நடன கலைஞர்களால் நிகழ்த்தி காட்டப்பட்டது. பாடல் முடிந்தவுடன் விழாவிற்கு வந்த அனைத்து பிரபலங்களும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். விருதைப் பெற்றதும் மேடையில் பேசிய கீரவாணி, ஆர்.ஆர்.ஆர். படத்தின் இயக்குநர் ராஜமௌலிக்கு நன்றி கூறினார். மேலும் கார்பெண்டர்ஸ் என்ற அமெரிக்க இசைக்குழுவின் பாடல்களை கேட்டுத்தான் நான் வளர்ந்தேன். இந்த வெற்றி என்னை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். 


இதன்மூலம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்குப் பிறகு இந்திய சினிமாவில் ஆஸ்கர் விருது வென்ற 2வது இசையமைப்பாளர் என்ற பெருமையை கீரவாணி பெற்றுள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக 2 ஆஸ்கர் விருதுகளை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 


ஆர்.ஆர்.ஆர். படம் 


கடந்தாண்டு இந்திய திரையுலகின் பிரமாண்ட இயக்குநர் என அழைக்கப்படும் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர். படம் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கீரவாணி இசையமைத்த இப்படத்தில் “நாட்டு நாட்டு” பாடலின் காட்சியமைப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் சமீபத்தில் கோல்டன் குளோப் விருதையும் நாட்டு நாட்டு பாடல் வென்றது குறிப்பிடத்தக்கது.