தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு ஒவ்வொரு வாரமும் புதுப்பட வெளியீடு இருந்துகொண்டே இருக்கும். கடந்த வாரம் வெளியான ராயன் மற்றும் டெட்பூல் அண்ட் லோவ்ரின் படங்கள் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றன.


பொதுவாக தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதுப்பட வெளியீடு இருந்து கொண்டே இருக்கும். அந்த வகையில் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி ஏராளமான படங்கள் வெளியாக உள்ளது. அந்த படங்களின் பட்டியலை கீழே விரிவாக காணலாம்.


மழை பிடிக்காத மனிதன்:


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உலா வருபவர் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய அவர் நடிகராகவும் அசத்தி வருகிறார். அவரது நடிப்பில் நாளைமறுநாள் வெளியாகிறது மழை பிடிக்காத மனிதன் படம். இந்த படத்தை விஜய் மில்டன் இயக்கியுள்ளார். மேகா ஆகாஷ், பிரியா பவானி சங்கர், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


போட்:


இம்சை அரசன் 23ம் புலிகேசி படம் மூலமாக இயக்குனராக அறிமுகமாகியவர் சிம்புதேவன். தரமான நகைச்சுவை படங்களை தருவதில் மிகவும் கில்லாடியான இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் போட். இந்த படத்தின் நாயகனாக யோகி பாபு நடித்துள்ளார். சுதந்திர போராட்ட காலத்தின்போது நடக்கும் கதைக்களமாக அமைந்துள்ள இந்த படத்தில் கௌரி, எம்.எஸ்.பாஸ்கர், சின்னி ஜெயந்த், மதுமிதா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படமும் நாளை மறுநாள் வெளியாகிறது.


வாஸ்கோடாகாமா:


தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடிக்க போராடி வரும் நடிகர் நகுல். இவரது திரை வாழ்வில் தொடக்கத்தில் இருந்த எதிர்பார்ப்பு அடுத்தடுத்து இவரது படங்களுக்கு இல்லாமல் போனது. இந்த சூழலில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் வாஸ்கோடாகாமா. ஆர்.ஜி.கிருஷ்ணன் இயக்கியுள்ள இந்த படம் வரும் 2ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் அர்த்தனா, கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரும் நடித்துள்ளனர்.


ஜமா:


தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றாக இருப்பது கூத்துக்கலை. தெருக்கூத்தின் பெருமையை சொல்லும் திரைப்படமாக திகழ்வது ஜமா ஆகும். இந்த படத்தின் ட்ரெயிலர் வெளியாகி ஏற்கனவே வரவேற்பை பெற்றிருந்தது. பாரி இளவழகனின் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தின் பாரி இளவழகன், அம்மு அபிராமி மற்றும் சேத்தன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இளையராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


பேச்சி:


தமிழ் சினிமாவில் த்ரில்லர் படங்களுக்கு என்று தனி வரவேற்பு உள்ளது. அந்த வகையில் காமெடிகளில் கலக்கி வந்த பாலசரவணன் நாயகனாக நடித்து அசத்தியுள்ள திரைப்படம் பேச்சி. இவருடன் தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காயத்ரி சங்கர் உள்பட பலரும் நடித்துள்ளனர். இந்த படமும் நாளை மறுநாள் வெளியாகிறது. இந்த படத்தை ராமச்சந்திரன் இயக்கியுள்ளார்.


கடமான்பாறை:


தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் மன்சூர் அலிகான். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கடமான்பாறை. இந்த படத்தில் அவரது மகன் அலிகான் துக்ளக் நாயகனாக நடித்துள்ளார். நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருந்து வந்த இந்த படம் நாளை மறுநாள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அனுராகவி மற்றும் ஜெனி நாயகிகளாக நடித்துள்ளனர்.


நண்பன் ஒருவன் வந்த பிறகு:


அறிமுக இயக்குனர் ஆனந்த் ராம் இயக்கி நடித்துள்ள படம் நண்பன் ஒருவன் வந்த பிறகு. படித்து முடித்த நண்பர்கள் வாழ்வில் இணைந்து முன்னேறுவது குறித்து எடுக்கப்பட்டுள்ள கதைக்களமாக அமைந்துள்ளது நண்பன் ஒருவன் வந்த பிறகு. இந்த படத்தை இயக்கியுள்ள ஆனந்த் ராமே முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் நாளை மறுநாள் வெளியாகிறது.


வரும் வெள்ளிக்கிழமை மொத்தம் 7 படங்கள் வெளியாகிறது. இதில் விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன் மற்றும் போட் படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது.