காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ஷாரூக்கானின் மனைவி கௌரி கான் அவரைப் பற்றிய பல தகவல்களை தெரிவித்துள்ளார். 


பாலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குநரும், நடிகருமான கரண் ஜோஹர் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் காஃபி வித் கரண் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு தங்கள் மனம் திறந்த பதில்களை அளிப்பதால் இதனை ரசிகர்கள் பலரும் விரும்பி பார்த்து வருகின்றனர். இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் தற்போது 7வது சீசன் நடைபெற்று வருகிறது. 


இதில் ஆலியா பட் - ரன்பீர், சாரா அலி கான், ஜான்வி கபூர், சமந்தா, அக்‌ஷய் குமார், விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அந்த வகையில் இந்த வாரம் பாலிவுட் நடிகர்களின் மனைவிகள் கலந்து கொண்டுள்ளனர். அதன்படி நடிகர் ஷாரூக்கானின் மனைவி கௌரி கான், நடிகர் சஞ்சய் கபூரின் மனைவி மஹீப் கபூர், நடிகர் ஷங்கி பாண்டேவின் மனைவி பாவனா பாண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 






இதனிடையே கரண் ஜோஹர் சமீபத்தில் ஒரு எபிசோடில், திரையில் மட்டுமல்ல, திரைக்கு வெளியேயும் கூட ஷாரூக்கான் எப்போதுமே ஒரு ஜென்டில்மேன். வீட்டில் விருந்து நடக்கும் போது ஒரு விருந்தினரை தங்கள் காருக்கு அழைத்துச் செல்வது அவரிடம் இருக்கும் ஒரு நல்ல விலை மதிப்பற்ற பழக்கம் என தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக கௌரி கானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 


அதற்கு பதிலளித்த அவர், ஷாரூக் எப்பொழுதும் விருந்தினரை அவர்களின் காருக்கு சென்று பார்க்கிறார். சில நேரங்களில் பார்ட்டிகளின் போது அவர், நிகழ்ச்சி நடக்கும் இடத்தை விட வெளியில் தான் அதிக நேரத்தை செலவிடுகிறார். மக்கள் அவரை தேடுகிறார்கள். இதனால்  வீட்டிற்குள் பார்ட்டியை நடத்துவதை விட சாலையின் வெளியே பார்ட்டியை நடத்துவது போல் நான்  உணருவேன் என தெரிவித்துள்ளார். மேலும் கௌரியிடம் மகள் சுஹானா கானுக்கு டேட்டிங் ஆலோசனையாக என்ன சொல்வீர்கள் என கேட்கப்பட்டதற்கு, ஒரே நேரத்தில் 2 பையன்களுடன் டேட்டிங் செய்ய வேண்டாம் என தெரிவித்தார். 


தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்திலும், ராஜ்குமார் ஹிரானியின் படத்திலும் ஷாரூக் நடித்து வரும் நிலையில் சமீபத்தில் வெளியான பிரம்மாஸ்திரா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.