நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியாகவுள்ள துணிவு படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியான நிலையில், இணையவாசிகள் படக்குழுவை சரமாரியாக விமர்சித்து வருகின்றனர். 


நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்களை தொடர்ந்து  தயாரிப்பாளர் போனி கபூர் - இயக்குநர் ஹெச். வினோத் - நடிகர் அஜித் கூட்டணி 3வது முறையாக இணைந்துள்ள படம் “துணிவு”.  ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தில் ஹீரோயினாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சமுத்திரக்கனி, ஜி.எம். சுந்தர், பிரேம், ஜான் கொக்கைன் உள்ளிட்ட பலரும் துணிவு படத்தில் இணைந்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. 


இப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில், ஏற்கனவே  ‘சில்லா சில்லா’ ‘காசேதான் கடவுளடா’ ‘கேங்ஸ்டா’ ஆகிய மூன்று பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. நேற்று முன்தினம் துணிவு படத்தின் கதாபாத்திரங்களின் பெயர்கள் வெளியிட்டப்பட்ட நிலையில் கடைசி வரை அஜித் கதாபாத்திரத்தின் பெயர் வெளியிடப்படவில்லை. 


படமும் வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாக பரவிய தகவலையும் படக்குழு மறுத்தது. இந்த நிலையில் நேற்று துணிவு படத்தின் ட்ரெய்லர் வெளியானது. ரசிகர்களின் கணிப்புப்படி வங்கி ஒன்றில் நடக்கும் கொள்ளையை மையமாக கொண்டே கதை நகர்த்தப்படுவதாக தெரிகிறது. மேலும் போஸ்டர்களில் எல்லாம் அஜித் ஒரே உடையணிந்து இருப்பது போன்று தான் வெளியாகியிருந்தது. இதனை கண்டு கடுப்பான ரசிகர்களுக்கு ட்ரெய்லர் பார்த்ததும் உண்மை என்ன என்பது தெரிய வந்தது. 


அஜித் மாஸ் லுக்கில், பட்டைய கிளப்பும் வசனங்களோடு ஆக்‌ஷன் காட்சிகளுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாமல் நடித்துள்ளார். இந்த நிலையில் தான் துணிவு படத்தை இணையவாசிகள் கழுவி ஊற்றுகின்றனர். காரணம் துணிவு படம் பார்ப்பதற்கு அப்படியே நடிகர் விஜய் நடித்து தோல்வியை தழுவிய பீஸ்ட் படத்தின் மேக்கிங் போல உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் துணிவு ட்ரெய்லர் வெளியான பிறகு பலரும் பீஸ்ட் படத்தின் ட்ரெய்லரை மீண்டும் ஒருமுறை பார்த்துள்ளனர். இரண்டையும் ஒப்பிட்டு பல புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.