சரக்கு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கூல் சுரேஷ் தொகுப்பாளினியிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட சம்பவத்திற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 


சரக்கு படத்தின் இசை வெளியீட்டு விழா


தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லன் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்து வருபவர் மன்சூர் அலிகான். வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி வரும் நிலையில், பொது இடங்களிலும் வெளிப்படையாக பேசி வருவதால் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது மன்சூர் அலிகான் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் மிக முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இதற்கிடையில் அவர் ஹீரோவாக நடித்துள்ள ‘சரக்கு’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. 


இந்த படத்தை ஜெயக்குமார் ஜே என்பவர் இயக்கியுள்ளார்.மேலும் ஹீரோயினாக வலினா பிரின்ஸ் நடிக்க, சிறப்பு தோற்றத்தில் பிரபல அரசியல்வாதி நாஞ்சில் சம்பத் நடித்திருக்கிறார். மேலும் மொட்டை ராஜேந்திரன், வினோதினி, கிங்ஸ்லி, ரவி மரியா, லொள்ளுசபா மனோகர், மதுமிதா, லியாகத் அலிகான், பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்ட பலரும் சரக்கு படத்தில் நடித்துள்ளனர். இந்த படமானது ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே திருப்பி போடும் வகையில் இருக்கும் என நேர்காணல் ஒன்றில் மன்சூர் அலிகான் தெரிவித்திருந்தார். தமிழ்நாட்டை பாடாய்படுத்தும் மதுவை வைத்து எடுக்கப்பட்ட புரட்சி படைப்பு தான் சரக்கு படம் எனவும் கூறியிருந்தார்.


சரக்கு இசை வெளியீட்டு விழா 


இதற்கிடையில் சரக்கு படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர் பாக்யராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மேலும் படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர். அப்போது மேடையில் நடிகர் கூல் சுரேஷூம் இருந்தார். வழக்கமாக நிகழ்ச்சிகளில் சர்ச்சையாக பேசி வாங்கி கட்டிக் கொள்ளும்  அவர், நேற்று சர்ச்சையான சம்பவம் ஒன்றை செய்தார். 


அவரை பேச தொகுப்பாளினி அழைத்தார். கழுத்தில் மாலை அணிந்து கொண்டு கையில் ஒரு மாலையுடன் வந்த அவர், சற்றும் எதிர்பாராதவிதமாக தொகுப்பாளினிக்கு மாலை அணிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதனைக் கண்டு தொகுப்பாளினி கடும் கோபமடைந்தார். ’எல்லோருக்கும் மாலை போட்டிங்க.. நம்மை வித்தியாசமான வார்த்தைகளை கூறி வரவேற்பவருக்கு மாலை போட்டோமா?” என அவர் காரணம் கூறினாலும் இந்த சம்பவம் பத்திரிக்கையாளர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. 


உடனடியாக மன்சூர் அலிகான் நன்றி தெரிவிக்க வந்த போது அவரிடம் ஒரு பெண் பத்திரிக்கையாளரிடம் கூல் சுரேஷ் இப்படி நடந்துக் கொள்ளலமா? என கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்த மன்சூர் அலிகான், ‘கூல் சுரேஷ் அப்படி நடந்தது தவறு தான். அவருடைய செயலைக் கண்டு நானே அதிர்ச்சியடைந்தேன். அவருக்கான நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என கூறி, கூல் சுரேஷையும் மன்னிப்பு கேட்க சொன்னார். 


ஆனால் அவரோ, வித்தியாசமான விளக்கம் ஒன்றைக் கொடுத்தார். இந்நிகழ்ச்சிக்கு வந்ததில் இருந்து நானும் அந்த பெண்ணும் பேசிக் கொண்டிருந்தோம் என கூற, அந்த தொகுப்பாளினி ‘நான் உங்களிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை’ என பதில் கொடுத்தார். தொடர்ந்து தான் தெரியாமல் அப்படி செய்துவிட்டதாகவும், மன்னிச்சுக்கோ தங்கச்சி’ என சொல்லியும் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தார். ஆனால் கூல் சுரேஷின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 




மேலும் படிக்க: HBD Mysskin: அன்பும், கோபமும் கொண்ட ஆளுமை.. ’ட்ரெண்டிங் ஸ்டார்’ மிஷ்கின் பிறந்தநாள் இன்று..!