தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படுபவர் நடிகை நயன்தாரா. கோலிவுட் சினிமாவில் நயன்தாராவின் வளர்ச்சி அபாரமானது. ரஜினி, விஜய், அஜித் என தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டவர். தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். பொதுவாக பெரிய ஹீரோக்களுடைய படங்கள் என்றாலே இயக்குநர்கள் பலரும் நயன்தாராவை கமிட் செய்வதிலேயே ஆர்வம் காட்டுகிறார்களாம். ஆனாலும் அறிமுக இயக்குநர்களாக இருந்தாலும் கதை பிடித்து போனால் பச்சைக்கொடி காட்டிவிடுகிறாராம்  நயன்தாரா. அப்படித்தான் அறிமுக இயக்குநர் விக்னேஷ் என்பவரது இயக்கத்தில் தற்போது ஹாரர் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் .


விக்னேஷ் இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் . பெயர் வைக்கப்படாத அந்த படத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் துவங்கி உள்ளது.  இந்த படத்தின் ஷூட்டிங்கை ஒரே கட்டமாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஃபேமிலி என்டேர்டைன்மெண்டோடு திகிலாக இந்த படம் உருவாகி வருகிறது. நயன்தாரா ஏற்கனவே மாயா, ஐரா, டோரா உள்ளிட்ட திகில் படங்களில் நடித்துள்ளார். மாயா படத்தில் பேயாகவும் நடித்து அசத்தியிருந்தார்.





நயன்தாரா தற்போது  ரஜினியுடன் அண்ணாத்த, விஜய்சேதுபதிக்கு ஜோடியாக காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் நெற்றிக்கண் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். நெற்றிக்கண் படத்தில் இதுவரை நடித்திடாத மாறுபட்ட சவாலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  பார்வை குறைபாடு உள்ளவராக நடித்திருக்கும் இந்த படம் ஹாட் ஸ்டார் ஒடிடி வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இது தவிர வடிவேலுவை வைத்து ‘எலி’ என்ற படத்தை இயக்கிய யுவராஜ் இயக்கத்தில் மற்றுமொரு படத்திலும் நடிக்க உள்ளாராம் நயன்தாரா. மேலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இரண்டு படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளாரம். அதே நேரம் தெலுங்கு படங்களிலும் கவனம் செலுத்துகிறாராம் . முன்னதாக ராஜமௌலி இயக்கும் பாகுபலி தி பிகினிங் என்ற படத்தில் ‘சிவகாம தேவியாக’ நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. அதே போல  அட்லீ “ஷாருக்கானை’ வைத்து இயக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளாராம் நயன்தாரா. தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக ஒப்பந்தமாகியுள்ளார் நயன். இதனால்  இவரிடம் அடுத்த இரண்டு வருடங்களுக்கு  புதிய இயக்குநர்களுக்கு கொடுக்க கால்ஷீட் இல்லை என கூறப்படுகிறது.




இது ஒரு புறம் இருக்க நயன்தாரா, விக்னேஷ் சிவனை விரைவில் திருமணம் செய்துக்கொள்வார் என்ற எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, அடுத்தடுத்த படங்களில் நயன்தாரா ஒப்பந்தமாகியிருப்பது சற்று ஏமாற்றம் அளிக்கக்கூடியதாக இருப்பதாக இருக்கிறது. முன்னதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் , கொரோனா சூழல் முடிவுக்கு வந்ததும் திருமணம் குறித்த அறிவிப்பதாகவும், தற்போது பணம் சேர்த்துக்கொண்டிருப்பதாகவும் இன்ஸ்டாகிராம் வாயிலாக தெரிவித்திருந்தார். ஆனால் நயன்தாரா பிஸியாக நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருவதால் இப்போது திருமண அறிவிப்பிற்கு வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.