இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் ஒடிடி வெளியீட்டிற்கு தயாராக உள்ள திரைப்படம் ‘நெற்றிக்கண்’ . இந்த திரைப்படத்தை ‘ அவள்’ என்ற ஹாரர் படத்தை இயக்கிய இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார் . இந்த திரைப்படத்தில்  நயன்தாரா பார்வை குறைபாடு உள்ளவராக நடித்திருப்பதாலேயே படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. பிரபல ஹாட் ஸ்டார்  நிறுவனம் படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது. மிரட்டும்  சைக்கோ த்ரில்லர் கதைக்களத்துடன்  எடுக்கப்பட்டுள்ள ‘நெற்றிக்கண்’ திரைப்படத்தின் அப்டேட்  குறித்து தயாரிப்பாளர் விக்னேஷ் சிவனிடம் ரசிகர்கள் தொடர்ந்து கேள்விகள் எழுப்பிவந்த நிலையில் படத்தின் டிரைலரை சமீபத்தில் படக்குழுவினர் வெளியிட்டனர்.  நெற்றிக்கண் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 13 அன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.இதன் டிரைலர்  தற்போது 6.3 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்நிலையில் படத்தின் முன்னோட்ட காட்சியான 'sneak peek' ஐ  படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 





படத்தில் நயன்தாரா துர்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது வெளியிடப்பட்ட முன்னோட்ட காட்சியில் தான் பயணித்த வாகனத்தின் ஓட்டுநர் ஏற்படுத்திய விபத்து குறித்து விளக்குகிறார் துர்கா. அவர் ஒரு பார்வை குறைபாடு உள்ளவர் என்பதால் அதனை காவலர் அலட்சியம் செய்ய, அவரை வியப்பில் ஆழுத்தும் விதமாக குற்றவாளியின் சில அடையாளங்களை குறிப்பிடுகிறார். இப்படியாக சஸ்பன்ஸ் நிறைந்த காட்சிகளுடன் நெற்றிக்கண் படத்தின் 'sneak peek' அமைந்துள்ளது.நெற்றிக்கண் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 13 அன்று  ஒடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. முன்னதாக படத்தை திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாம் அலை காரணமாக அந்த முடிவுகள் ஒத்திவைக்கப்பட்டன.ஓடிடி தளங்களில் வெளியிடப்படும் திரைப்படத்திற்கும் ரசிகர்கள் அமோக வரவேற்பை கொடுப்பதால், இந்த படத்தை ஒடிடியில் வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தற்போது ஹாட்ஸ்டாரில் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. படத்தில் நயன்தாராவுடன்  அஜ்மல், மணிகண்டன், சரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கான திகில் இசையை கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்து கொடுத்துள்ளார்.



 


நயன்தாராவின் நெற்றிக்கண் படம் தவிர்த்து , ரஜினியுடன் அண்ணாத்த , விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களும் கிட்டத்தட்ட வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. நயன்தாரா அறிமுக இயக்குநர் விக்னேஷ் என்பவரது இயக்கத்தில் தற்போது ஹாரர் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் .விக்னேஷ் இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் . பெயர் வைக்கப்படாத அந்த படத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் துவங்கி உள்ளது.  இந்த படத்தின் ஷூட்டிங்கை ஒரே கட்டமாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஃபேமிலி என்டேர்டைன்மெண்டோடு திகிலாக இந்த படம் உருவாகி வருகிறது. நயன்தாரா ஏற்கனவே மாயா, ஐரா, டோரா உள்ளிட்ட திகில் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


காவல் நிலையத்தில் போலீஸ் அதிகாரியுடன் நயன்தாரா உரையாடும் காட்சியில் போலீஸ் அதிகாரி வெங்காய பஜ்ஜி சாப்பிட்டதை, பார்வைதிறன் அற்ற நயன்தாரா கண்டுபிடித்து விடுகிறார். அவரது அபார ஆற்றலை தெரிவிக்கும் விதமாக இந்த காட்சி வெளியிடப்பட்டுள்ளது.