என் அம்மாவுக்காக எது வேண்டுமானாலும் நான் செய்வேன் என நடிகை மீனாவின் மகள் நைனிகா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளது மீண்டும் இணையத்தில் வைரலாகியுள்ளது. 


1982 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா சிவாஜி கணேசன், ரஜினி உள்ளிட்ட பிரபலங்களின் படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து 1990 ஆம் ஆண்டு ஹீரோயினாக நடிக்க தொடங்கிய அவர், சினிமாவில் 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். மீனா தமிழ் சினிமாவில் நடிக்காத முன்னணி நடிகர்களின் படங்களே இல்லை என்கிற அளவுக்கு புகழ் பெற்றார். தமிழ் சினிமா இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறார். 


இப்படியான மீனாவுக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு நைனிகா என்ற மகள் உள்ள நிலையில், கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் வித்யாசாகர் உயிரிழந்தார். இதனால் நிலைகுலைந்து போன மீனாவுக்கு சக பிரபலங்களும், ரசிகர்களும் பக்கப்பலமாக இருந்து அவர் மீண்டு வர கைக்கொடுத்தனர். தற்போது மீனா உற்சாகமாக காணப்படுகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ் ஆகவும் இருக்கிறார். 


இதனிடையே மீனாவின் மகள் நைனிகா, 2016 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ’தெறி’ படத்தில் நடிகர் விஜய்க்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பாஸ்கர் தி ராஸ்கல் உள்ளிட்ட சில படங்களில் நடித்த நைனிகா தற்போது படிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் மீனா சினிமாவுக்கு அறிமுகமாகி 40 வருடங்கள் கடந்துள்ள நிலையில், நைனிகா ஊடகம் ஒன்றிற்கு நேர்காணல் அளித்துள்ளது மீண்டும் இணையத்தில் வைரலாகியுள்ளது. 


அதில், “அம்மா என்னை திட்டவே மாட்டாங்க. ரொம்ப சப்போர்டிவா இருப்பாங்க. இந்த ஜெனரேஷன் குழந்தைகளுக்கு இப்பவே எல்லாமே தெரியும். ஆனால் அம்மா இதெல்லாம் கொஞ்சம் டைம் எடுத்து யோசித்து பார்க்கணும் என சொல்வாங்க. நான் சோகமாக இருந்தால் எனக்கு சாப்பிட ஏதாவது வாங்கி தருவாங்க. இல்லைன்னா மன்னிப்பு கேட்பாங்க. ஒருவேளை அவங்க சோகமாக இருந்தா நான் எதாச்சும் செஞ்சு கொடுத்து சமாதானம் பண்ணுவேன். 


மேலும் அம்மா கிட்ட நான் நிறைய விஷயம் சொல்லாம மறைச்சுருக்கேன். மத்த அம்மாவை விட எங்கம்மா எனக்கு ஸ்பெஷல். எனக்கு படிப்பு தவிர எந்த விஷயத்தையும் கட்டாயப்படுத்த மாட்டங்க. இப்ப அவங்க என்னை பார்த்துகிறதை விட,  நான் தான் எங்கம்மாவை பார்த்துகிறேன். அதேபோல் என்னுடைய வாழ்வில் மறக்க முடியாத நாள் என்றால் அது தெறி படத்தின் ஷூட்டிங் தான். விஜய் கூட நான் நடிச்சது கடவுளின் கிருபை தான். அம்மா இந்த 40 வருடமா சினிமாவில் இருந்தது சாதாரண விஷயம் இல்லை. நான் வாழ்க்கையில் வெற்றி பெற்று உங்களை நான் நன்றாக பார்த்துக் கொள்வேன். உங்களுக்காக வீடு ஒன்று வாங்கி தருவேன். எது வேண்டுமானாலும் பண்ணுவேன்” என அந்த நேர்காணலில் நைனிகா தெரிவித்துள்ளார்.