பிரேமம் திரைப்படம் மூலம் ரசிகர்களின் மனதை கட்டிப்போட்ட நடிகை சாய் பல்லவி, நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா இணைந்து நடித்து உள்ள லவ் ஸ்டோரி படம் கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி வெளியானது. தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த படம் இன்னும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. பிரபல இயக்குநர் சேகர் கம்முலா இயக்கிய இந்த படத்தில் உயர்சாதி பெண்ணாக நடித்திருக்கும் சாய் பல்லவி, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த நாக சைதன்யாவை காதலிப்பதால் ஏற்படும் பிரச்சனைகளை சந்திக்கிறார்.


சமூகத்தில் புரையோடிப் போய் இருக்கும் சாதிவெறி கவுரவக் கொலை பிரச்சனைகள் குறித்தும் குடும்பத்தில் நெருக்கமானவர்களால் பெண்கள், சிறுமிகள் சந்திக்கும் பாலியல் தொல்லைகள் குறித்தும் துணிச்சலாக இப்படம் மூலம் இயக்குநர் சேகர் கம்முலா பேசி இருக்கிறார். குறிப்பாக இதில் நடிகர் நாக சைதன்யா, நடிகை சாய் பல்லவியின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. அண்மையில் தமிழில் வெளியான பாவக் கதைகள் என்ற ஆந்தாலஜி படத்தில் வெற்றிமாறன் இயக்கிய பகுதியில் இதே போன்றதொரு கதையில் சாய் பல்லவி நடித்திருந்தார்.



இந்த நிலையில், லவ் ஸ்டோரி படத்தின் படப்பிடிப்பு தலத்தில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வு ஒன்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது. லவ் ஸ்டோரி படத்தில் பல்வேறு உணர்வுப்பூர்வமான காட்சிகளை வைத்து இயக்குநர் சேகர் கம்முலா ரசிகர்கள் மனதை ஈர்த்திருக்கிறார். அதில் முக்கியமான ஒன்று நாக சைதன்யாவும் சாய் பல்லவியும் ரயிலில் செல்லும் காட்சி.


ரயிலில் மக்கள் கூட்டத்துக்கு மத்தியில் நாக சைதன்யாவின் கண்ணத்தில் சாய் பல்லவி திடீரென ஒரு முத்தம் கொடுப்பார். இதை சற்றும் எதிர்பார்க்காத நாக சைதன்யா மகிழ்ச்சியையும், மனதில் இருக்கும் வலியையும், ஆச்சரியத்தையும் ஒரே நேரத்தில் கலங்கிய கண்களுடன் வெளிப்படுத்துவார். மிக அற்புதமாக எடுக்கப்பட்டுள்ள அந்த ஒரு காட்சி நாக சைதன்யாவின் சிறப்பான நடிப்பு திறனை வெளிப்படுத்தியது.


ரசிகர்களின் மனதில் பதிந்த இந்த காட்சியை படமாக்க 6 மணி நேரத்தை படக்குழு செலவழித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கு முன் நாக சைதன்யா நடித்த படங்களில் இதுபோன்ற ஒரு உணர்வுப் பூர்வமான காட்சியில் நடித்தது இல்லை. எனவே இதில் நடிக்க அவர் மிகவும் சிரமப்பட்டு இருக்கிறார். 3 வகை உணர்வுகளையும் ஒரே நேரத்தில் முகத்தில் கொண்டு வர முடியாமல் தடுமாறிய நாக சைதன்யாவுக்கு இயக்குநர் சேகர் கம்முலா நேரம் கொடுத்து உள்ளார்.


இறுதியாக 6 மணி நேரம் கழித்து இயக்குநர் எதிர்பார்த்தபடி ஒட்டுமொத்த உணர்வுகளையும் முகத்தில் கடத்தி சிறப்பான நடிப்பை திரையில் காட்டியுள்ளார் நாக சைதன்யா.