விவாகரத்துக்குப் பின் தான் ஒரு புதிய மனிதராக உணர்வதாக நடிகர் நாக சைதன்யா கூறியிருக்கிறார். நாகர்ஜூனா அமலா தம்பதியின் மகனான நாக சைதன்யா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை சமந்தாவை கரம் பிடித்தார். க்யூட் கப்பிள்ஸாகவே இருவரும் வலம் வந்தனர். ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை, இவர்கள் திருமணம் 4 ஆண்டுகளிலேயே முறிந்தது.


சமந்தாவும் நாக சைதன்யாவும் ஒரே நேரத்தில் விவாகரத்து முடிவை தத்தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தனர். இருவரின் பதிவிலும் சமந்தா, சைதன்யா என்ற வார்த்தை மட்டுமே மாறி இருந்தது. மற்றபடி ஒரே தகவலையே அவர்கள் பதிவிட்டு உள்ளனர். குறிப்பாக தங்கள் நீண்ட நாள் நட்பு தொடரும் என்றும், இந்த கடினமான காலத்தில் தங்களின் தனிப்பட்ட ரகசியம் மற்றும் சுய உரிமைக்கு மதிப்பளிக்குமாறும் ரசிகர்களிடம்  இருவரும் கேட்டுக்கொண்டனர்.
இது டோலிவுட், கோலிவுட் என இரண்டு சினிமா உலகிலுமே சென்சேஷனல் பேச்சானது.


இந்நிலையில் நடிகை சமந்தா நேற்று முன் தினம் காஃபி வித் கரன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் அவர் பல சுவாரஸ்ய தகவல்களைப் பகிர்ந்தார். எனக்கும் நாக சைதன்யாவுக்குமான உறவு இப்போது எப்படி இருக்கிறது எனக் கேட்கிறீர்கள். அதாவது என்னையும், அவரையும் ஒரே ரூமில் அடைத்தால் அந்த ரூமில் கூர்மையான ஆயுதங்களை மறைத்து வைக்க வேண்டுமா என நீங்கள் சந்தேகப்படுகிறீர்கள்? ஆம் இப்போதைக்கு அது உண்மைதான். ஆனால் எதிர்காலத்தில் நிலைமை மாறலாம். நான் நாக சைதன்யாவை பிரிய ரூ.250 கோடி நஷ்ட ஈடு பெற்றதாக எல்லாம் பேசுகிறீர்கள்.




 


உண்மையில் இந்த வதந்தியை நம்பி ஐடி ரெய்டு ஏதும் வராமல் இருந்தால் போதும் என்று பேசியிருந்தார். ஓரிடத்தில் கரன் ஜோஹர் உங்கள் கணவர் நாக சைதன்யா எனக் கூற அவரை நிறுத்தி திருத்தி என் முன்னாள் கணவர் என்று கூறுங்கள் எனக் கூறினார். சமந்தாவின் எபிசோட் செம்ம ஹிட்டானது. அதில் அவருடன் பங்கேற்றது நடிகர் அஜய் தேவ்கன். அஜய் தேவ்கனும் சமந்தாவும் ஊ சொல்றீயா மாமா பாடலுக்கு போட்ட குத்தாட்டம் இணையத்தில் வைரலானது.


இந்நிலையில் நேற்று அதே காஃபி வித் கரன் நிகழ்ச்சியில் நாக சைதன்யா கலந்து கொண்டார். அவரை மட்டும் சும்மா விட்டுவிடுவாரா என்ன கரன் ஜோஹர். அவரிடமும் விவாகரத்துக்குப் பிந்தைய வாழ்க்கை பற்றி கேட்கப்பட்டது. அதற்கு நாக சைதன்யா, விவாகரத்துக்குப் பின்னர் எனது வாழ்க்கை நிறையவே மாறியுள்ளது. நான் இப்போதெல்லாம் என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் அதிகம் செலவழிக்கிறேன். முன்னர் என்னால் நிறைய மனம் திறந்து பேச முடியாது. இப்போது நான் ஒரு புதிய மனிதனாக இருக்கிறேன் என்றார்.


இவ்வாறு சமந்தாவும், நாக சைதன்யாவும் தங்களின் விபி (அதாங்க விவாகரத்துக்கு பின் உள்ள வாழ்க்கை) பற்றி மனம் திறந்து பேசியுள்ளனர்.


இதற்கிடையில், நாக சைதன்யா இரண்டாவது திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், அவரது தந்தை நாகார்ஜுனா மற்றும் அவரது குடும்பத்தினர் வருங்கால மருமகளை எதிர்பார்த்து வருவதாகவும் டோலிவுட் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. இந்த முறை நடிகர் தனது வருங்கால மனைவி திரையுலகில் இருந்து வரக்கூடாது என்று வலியுறுத்தினார் என்று கூறப்பட்டது.