கஸ்டடி படத்துக்காக இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்தது குறித்து நாகசைதன்யா நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ள பதிவு வைரலாகி வருகிறது.


வெங்கட் பிரபு இயக்கத்தில், நாகசைதன்யா நடிப்பில் உருவாகியுள்ள கஸ்டடி படத்தின் படிப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்தது. மாநாடு, மன்மத லீலை படங்களைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் படம் கஸ்டடி. தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் உருவாகியுள்ள இந்தப் படம் நாக சைதன்யாவின் 22ஆவது படமாகும்.


பங்கராஜூ படத்தைத் தொடர்ந்து நாகசைதன்யாவுக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி இந்தப் படத்தில் இணைந்துள்ளார். நடிகர்கள் அரவிந்த் சாமி, சரத் குமார், பிரேம்ஜி, பிரியாமணி, வெண்ணிலா கிஷோர் சம்பத் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.


இந்தப் படத்துக்கு இளையராஜா - யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். மாமனிதன் படத்துக்குப் பிறகு இந்தப் படத்துக்கு இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். 


இந்நிலையில், முன்னதாக இப்படத்துக்காக தான் இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்தது குறித்து நாக சைதன்யா ஃபேன் பாய் தருணத்தில் இருந்து பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. 


”இசைஞானி இளையராஜா சாரை சந்தித்த என் முகத்தில் தான் இத்தனை பெரிய சிரிப்பு, அவரது இசை என்னை வாழ்க்கையில் பல பயணங்களில்அழைத்துச் சென்றுள்ளது. அவரது இசையுடன் என் மூளைக்குள் பலமுறை ஒரு காட்சியை நான் நடித்திருக்கிறேன், ஒரு ஸ்கிரிப்டை நினைச்சு பாத்திருக்கேன். 


இப்போது ராஜா சார் நான் நடிக்கும் கஸ்டடி படத்துக்கு இசையமைக்கிறார். நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன்” என ட்வீட் செய்துள்ளார். 




இளையராஜாவுடன் நாக சைதன்யா முதன்முறையாக இந்தப் படத்துக்காக இணைந்துள்ள நிலையில், இளையராஜாவை சந்தித்து நாகசைதன்யா பகிர்ந்துள்ள இந்தப் பதிவு இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது.


இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தத நிலையில் இதனை வீடியோ பகிர்ந்து படக்குழு நேற்று அறிவித்திருந்தது.






இந்நிலையில், கஸ்டடி படம் வரும் மே 12ஆம் தேதி திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.