இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடித்தபோது அப்படத்தின் தயாரிப்பாளர் ஷங்கருடன் வடிவேலுவுக்கு மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக படத்தில் நடிக்க மறுத்த வடிவேலு மீது ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து வடிவேலுவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு, அவர் படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார் வடிவேலு சமீபத்தில் அவர் மீதான ரெட் கார்டு நீக்கப்பட்டதை அடுத்து மீண்டும் படங்களில் நடிக்க அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது வடிவேலுவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அவர் முதலாவதாக சுராஜ் இயக்கத்தில் உருவாகும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் (naai sekar returns) படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்தில் வடிவேலு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக தயாராக உள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.



இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் தொடங்கி உள்ளது. இந்த படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி, டாக்டர் பட பிரபலம் ரெடின், நடிகர் ஆனந்தராஜ், ஆர்.ஜே.விக்னேஷ் காந்த் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதியுடன் நடிக்க வடிவேலு ஒப்பந்தமாகியுள்ளார். நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி வைரலாகி இருந்தது. மேலும் பல வருடங்களுக்கு பின்னர், வடிவேலு இந்த ஆண்டு தன்னுடைய பிறந்தநாளை 'நாய் சேகர்' படக்குழுவினருடன்தான் கொண்டாடி மகிழ்ந்தார். இது குறித்த புகைப்படங்களும் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலானது.


மேலும் வடிவேலு சுராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தின் பெயர் 'நாய் சேகர்' என்று கடந்த இரண்டு வருடங்களாகவே ஒரு தகவல், உலா வந்தாலும் இதனை படக்குழுவினர் முறையாக தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யாமல் இருந்த காரணத்தால் இந்த படத்தின் தலைப்பை நடிகர் சதீஷ் நடித்து வரும் படத்திற்கு முறையாக பதிவு செய்து வைக்கப்பட்டது.



படத்தின் பெயருக்காக முட்டி மோதி பார்த்தும் தலைப்பு கிடைக்காததால்... பின்னர் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' என்று பெயர் வைத்து, அதனை ஃபர்ஸ்ட் லுக்குடன் அதிகார பூர்வமாக வெளியிட்டனர். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்புக்காக லண்டன் பரந்துள்ள படக்குழுவுடன் அங்கு வடிவேலுவின் பாடலை உருவாக்கி வருகின்றனர், அதன் புகைப்படம் வைரலாகி வருகிறது. லண்டனுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாடல் கம்போசிங்கிற்காக சென்றுள்ளதாக கூறப்படுகிறது.


பாடலை உருவாக எதற்காக வடிவேலு என்ற கேள்வியை கேட்க தோன்றும், ஏற்கனவே சந்தோஷ் நாராயணன் வடிவேலுவுடைய பெரிய ஃபேன் என்பதால் அவர் இசையில் ஒரு பாடல் பாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக செய்திகள் வந்தன. எனவே லண்டனில் கம்போஸ் செய்யும் பாடல் வடிவேலு பாடப்போகும் பாடலாக கூட இருக்கலாம்.