லண்டனில்  நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படக்குழு முகாமிட்டுள்ளது. அங்கு எடுத்துக் கொண்ட நடிகர் வடிவேலுவின் ஃபோட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


இன்றைக்கும் இரவு தொலைக்காட்சியை அணைப்பதற்கு முன்னதாக தேடி ஒரு வடிவேலு காமெடி பார்த்துவிட்டு படுக்கைக்குச் செல்வோர் கோடிக் கணக்கானோர் என்றால் அது மிகையாகாது. சிரிப்பைப் போன்றதொரு மருந்து இல்லை. அதுவும் வடிவேலு தரும் சிரிப்பைப் போன்றதொரு அருமருந்து சமகாலத்தில் இல்லவே இல்லை. அந்த அளவுக்கு எந்த கதாபாத்திரமானாலும் கனகச்சிதமாகப் பொருந்திப் போய் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைப்பதில் சமகாலத்தில் அவருக்கு நிகர் அவர் மட்டுமே.


அவர் விட்டுச் சென்ற இடத்தை நிரப்ப இந்த குறுகிய காலத்தில் பலபேர் காமெடி களத்தில் வந்துவிட்டனர். அபாரமாக நடிக்கவும் செய்கின்றனர். ஆனால் வடிவேலு போல் மக்கள் மனங்களில் நிற்பார்களா என்பது சந்தேகம் தான்.
ஸ்க்ரீனில் வடிவேலுவைப் பார்த்துவிட்டாலே போது மனம் குழந்தைபோல் ஆகிவிடும். அவருடைய காமெடி வசனங்கள் பள்ளிக்கூடம், பணியிடம், கல்லூரி, கச்சேரி சபா, அரசியல், சமூக வலைதளம் என எல்லாவற்றிலும் பொருந்திப் போகக்கூடியது. டைமிங்கா, ரைமிங்கா சொல்லி இளசுகள் கூட அப்ளாஸ் அள்ளலாம். அப்படிப்பட்ட உன்னதக் கலைஞர் நீண்ட காலத்திற்குப் பிறகு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கிறார்.


இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் வடிவேலு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. வடிவேலு தவிர படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் மற்றும் நடிகைகள் குறித்த விவரங்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. அண்மையில் இந்தப் படத்திற்கான பூஜை நடந்து முடிந்தது.




இந்நிலையில் படக்குழு லண்டன் பறந்துள்ளது. சரி படப்பிடிப்பா, பாடல் சூட்டிங்கா என்று விசாரித்தால் அதெல்லாம் இல்லையாம்.


லைகா நிறுவனம் சார்பாக சுபாஷ்கரன் லண்டனில் கிறிஸ்துமஸ் பார்ட்டி கொடுக்கிறாராம். அதில் கலந்து கொள்ளவே வடிவேலு உள்ளிட்ட படக்குழுவினர் லண்டன் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.


ஆனால், அத்துடன் படத்திற்கு தேவைப்படும் 8 நடிகைகள் அங்கேயே தேர்வு செய்து ஒப்பந்தம் செய்யப் போகிறார்களாம்.
புத்தாண்டு கொண்டாட்டமும் அரங்கேறும், புதுமுகத் தேர்வும் நடைபெறும். ஒரே கல்லில் இரண்டு  மாங்காய் என்று படக்குழு முடிவு செய்து லண்டனில் முகாமிட்டுள்ளதாம்.


லண்டனில் வடிவேலு விண்ட்டர் சூட்டுடன் படக்குழுவினருடன் எடுத்த புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


லண்டனில் ஓமிக்ரான் கொரோனாவும் முகாமிட்டுள்ளதால் படக்குழுவினர் பாதுகாப்பாக பத்திரமாக கொண்டாட்டத்தையும், காஸ்ட் அண்ட் க்ரூ தேர்வையும் முடித்து வர வேண்டும் என்பது வடிவேலு ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.