தமிழின் பிரபல நடிகர், இயக்குனர் சமுத்திரக்கனியின் வீட்டில் மர்மப் பெண் ஒருவர் நுழைந்ததாகவும், காரில் இருந்த ரெயின் கோட்டை எடுத்து சென்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


பிரபலங்களின் வீடு


சென்னையில் பல பிரபலங்களின் வீடுகள் வடபழனி, வளசரவாக்கம், கோடம்பாக்கத்தை ஒட்டி இருக்கும். தற்போது எல்லா இடங்களிலும் நெருக்கமான வீடுகள் வந்துவிட்டதால் பலர் ஈ.சி.ஆர். நோக்கி படையெடுக்கின்றனர். ஆனால் இன்னமும் பல நடிகர்களின் வீடு சென்னையின் முக்கியமான பகுதியில்தான் உள்ளன. சில நேரங்களில் இந்த நடிகர்களுக்கு ரசிகர்களால் தொந்தரவு ஏற்படுவது உண்டு.


சில நேரங்களில் அது ஒரு பிரபலத்தின் வீடு என்பதே தெரியாமல் சென்று அங்கு சிலர் பிரச்சனை செய்வதையும் பார்த்திருப்போம். அதே போல திரைப்பட நடிகர் சமுத்திரக்கனி வீட்டில் ஒரு பிரச்னை ஏற்பட்டு காவல் நிலையம் வரை சென்றுள்ளது.   



கார் மீது தூக்கம்


சமுத்திரக்கனியின் அலுவலகம், மதுரவாயல் அருகே உள்ள ஆலப்பாக்கம், அஷ்டலெட்சுமி நகரின் 10வது தெருவில் உள்ளது. சமீபத்தில் இரவு நேரத்தில் அந்த அலுவலக வளாகத்திற்குள் நுழைந்த மர்ம பெண் ஒருவர் அங்கிருந்த காரின் மீது ஏறி படுத்து தூங்கியுள்ளார். அதன்பிறகு கதவை திறந்து உள்ளே இருந்த மழை கோர்ட்டை எடுத்து அணிந்து சென்றுள்ளார். 


தொடர்புடைய செய்திகள்: Rain Alert: அடுத்த 5 நாட்களுக்கு மழை வரப்போகுது.. சென்னையில் என்ன நிலை? வானிலை அறிவிப்பு இதோ..


மனநலம் பாதிக்கப்பட்டவர்


இது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த நிலையில், அந்த சிசிடிவி பதிவுகளை எடுத்துக்கொண்டு சென்று சமுத்திரகனியின் மேனேஜர் விவேக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சமுத்திரக்கனி அலுவலகத்தில் நுழைந்த மர்ம பெண் யாரென போலீஸார் விசாரணை மேற்கொண்ட நிலையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவரென தெரிய வந்துள்ளது. 



சமுத்திரக்கனி


தமிழில் இயக்குனராக அறிமுகமான சமுத்திரக்கனி, தனது நண்பரான சசிகுமார் இயக்கத்தில் நடிக்க தொடங்கி, தொடர்ச்சியாக ஒரு முக்கியமான நடிகராக வலம் வந்து தேசிய விருது வரை பெற்று, தற்போது தென்னிந்திய நடிகர் என்ற முகத்தை பெற்றுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து முக்கியமான துணைக் கதாபாத்திரங்களில் நடித்துவரும் சமுத்திரக்கனி தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துவரும் 'துணிவு' உட்பட பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் விசாரணை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது பெற்றார். தெலுங்கில் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்ததில் இருந்து நிறைய தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வரும் அவர் மலையாளத்திலும் அவ்வபோது நடித்து வருகிறார். இவரது வீட்டில் இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.