1970களில் தமிழ் சினிமாவை தனது இசையால் புரட்டி போட்டவர் இளையராஜா. தமிழ் திரைப்பட இசையை பலர் திரும்பி பார்க்க வைத்த ராக தேவன் நம் இசைஞானி. இசைஞானி என்றவுடன் பலரின் ஞாபகத்திற்கு வருவது அவருடைய ஒரு காணொலி தான். சிங்கப்பூரில் ஒரு இசை கச்சேரி நடைபெற்று கொண்டிருக்கும். அதில் நாயகன் படத்தின் ‘தென்பாண்டி சீமையில’ பாடலை இளையராஜா மாற்றி பாடியிருப்பார். அதை, 


“ஏழு ஏழு கடல் கடந்து இங்கு வந்து வாழ்பவரே எந்நாளும் உமக்கெனவே இசை தொடுப்பேனே…. மீளாத சோகம் என்ன தாழாத துயரம் என்ன சொல்லாமல் துடைப்பது எது என் இசை தானே.. உன் வாழ்வில் சில நொடிகள் என் வாழ்வில் சில நொடிகள் எந்நாளும் நினைவில் இருக்கும் இந்நொடி தான்.” எனப் பாடியிருப்பார். 


 



இளையராஜா ரசிர்களுக்கு இந்த வரியை கேட்கும் போதே கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வரும். இத்தகைய சிறப்பு மிக்க இசை கலைஞர் தமிழ் சினிமாவில் இரண்டு பெரிய ஜாம்பவான் பாடல் ஆசிரியர்களிடம் பணியாற்றி அசத்தினார். ஒருவர் கவியரசு கண்ணதாசன் மற்றொருவர் கவிஞர் வாலி. இந்த இருவருடனும் இளையராஜா கை கோர்த்தால் அது மிகப்பெரிய ஹிட் தான். 


அந்தவகையில் முதலில் கண்ணதாசன்- இளையராஜா கூட்டணியில் அமைந்த சில சிறப்பான பாடல்கள் குறித்து பார்ப்போம். கவியரசு கண்ணதாசன் குறித்து இளையராஜா பேசும் போது ஒரு முறை, “எனக்கு எப்படி ஒரு பாட்டிற்கான இசை யோசிக்காமல் எளிதில் வருமோ அதேபோன்று கவிஞருக்கு பாடல் வரிகள் அப்படியே யோசிக்காமல் எளிதில் வரும்” எனக் கூறியிருந்தார். இவர்கள் இருவரின் கூட்டணியில் வந்த முதல் பாடல் கொலகொலயா முந்திரிக்கா. 




இப்பாடல் பாலூட்டி வளர்த்த கிளி என்ற திரைப்படத்தில் அமைந்திருக்கும். இதன் முதல் வரி கண்ணோடு கண்ணு என்று ஆரம்பிக்கும். அதேபோல இவர்கள் இருவரின் கூட்டணியில் அமைந்த கடைசி பாடல் கண்ணே கலைமானே. இவர்கள் இருவருக்கும் அப்படி ஒரு பந்தமாக இரு பாடல்களிலும் கண் என்ற சொல் அமைந்தது. இந்த இரண்டு பாடல்களிலும் கண், கண் என்ற சொல் வந்தது இதை கண்ணதாசன் எழுதியிருந்தார். 


 


இளையராஜா-கண்ணதாசன் கூட்டணியில் அமைந்த சில சிறப்பான பாடல்கள்: 


 



  1. கொலகொலயா முந்திரிக்கா


 




  1. செவந்திப்பூ முடிச்ச சின்னக்கா 


இந்தப் பாடல் மலேசியா வாசுதேவன் மற்றும் சுசீலாவின் குரலில் சிறப்பான ஒன்றாக அமைந்திருக்கும். 


 




  1. சொர்க்கம் மதுவிலே 


சட்டம் என் கையில் என்ற படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் எஸ்பிபி குரலில் இளையராஜாவின் இசையுடன் ஒன்றி இருக்கும். 


 




  1. செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்:


1978ஆம் ஆண்டு வெளி வந்த முள்ளும் மலரும் படத்தில் இடம்பெற்ற இந்தப்பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. யேசுதாஸின் குரல் பாடலுக்கு இன்னும் அழகு சேர்த்திருக்கும். 


 




  1. இளமை எனும் பூங்காற்று


பகலில் ஒரு இரவு என்ற படத்தில் இடம்பெற்ற இந்தப்பாட்டை எஸ்பிபி தன்னுடைய காந்த குரலில் அழகாக பாடியிருப்பார். இந்த பாடல் எஸ்பிபி பாடிய காலத்தால் அழியாத பாடல்களில் ஒன்று. 


 



 


இவை தவிர கண்ணாதாசனின் கடைசி திரைப்பாடலுக்கு இசையமைத்தவர் என்ற பந்தமும் இளையராஜாவிற்கு உண்டு. அந்தப்பாடலிலும் இளையராஜா,கண்ணதாசன், யேசுதாஸ் கூட்டணி கலக்கி இருக்கும். கண்ணே கலைமானே பாடல் கேட்கும் போது அவ்வளவு மன அமைதி கிடைக்கும். 


 



இளையராஜா-வாலி கூட்டணி:


கவிஞர் வாலி தமிழ் திரைப்பட இசையில் 15 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். அவற்றில் 5 ஆயிரம் பாடல்கள் இளையராஜாவிற்கு மட்டும் எழுதியுள்ளார். அதில் 100 பாடல்களுக்கு மேல் ராஜா என்று பாடல் வரிகளில் எழுதியுள்ளார். அது அனைத்தும் மிகவும் ஹிட்டான பாடல்கள். குறிப்பாக வளையோசை கலகலவென பாடலில்,


‘ராகங்கள் தாளங்கள் 100... ராஜா உன் பேர் சொல்லும் பாரு’ என்று சரியாக எழுதியிருப்பார். இவர்கள் கூட்டணியில் அமைந்த சில வெற்றி பாடல்கள் 


 



  1. ஒரே நாள் உனை நான்:


இளமை ஊஞ்சல் ஆடுகிறது என்ற படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை எஸ்பிபி மற்றும் வாணி ஜெயராம் பாடியிருப்பார்கள். இது ஒரு சிறப்பான காதல் டூயட் ஆக அமைந்தது. 


 




  1. நினைவோ ஒரு பறவை:


சிகப்பு ரோஜாக்கள் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை கமல்ஹாசன் மற்றும் ஜானகி சிறப்பாக பாடியிருப்பார்கள். இதற்கு வாலியின் வரிகளும் கூடுதல் சிறப்பு சேர்த்திருக்கும். 


 




  1. மடை திறந்து:


நிழல்கள் படத்தில் இடம்பெற்ற மடை திறந்து என்ற பாடலை கவிஞர் வாலி எழுதியிருப்பார். இந்தப் பாடலுக்கு எஸ்பிபி தனது காந்த குரலில் கூடுதல் வலு சேர்த்திருப்பார். 


 




  1. ஆகாய வெண்ணிலாவே:


அரங்கேற்ற வேளை படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்று இருக்கும். யேசுதாஸ் மற்றும் உமா ரமணன் இந்தப் பாடலை பாடியிருப்பார்கள். 


 




  1. தென்மதுரை வைகை நதி:


தர்மத்தின் தலைவன் படத்தில் இடம்பெற்றுள்ள இந்தப் பாடலில் அண்ணன் தம்பி, காதலன் காதலி உறவை பறைசாற்றும் வகையில் வரிகள் இடம்பெற்று இருக்கும். 


 



இந்த இருவர் கூட்டணியில் மேலும் பல பாடகள் உள்ளன. அவற்றையெல்லாம் சேர்த்தால் இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும். எனவே இன்று 78ஆவது பிறந்தநாள் காணும் இளையாராஜா இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து நமக்கு இசையை தர வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திபோம்.