கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் காரணமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி முழு ஊரடங்கு பிறப்பித்தது, மருந்தகங்கள், உணவகம், பால் கடைகள் தவிர்த்து வேறு எந்த ஒரு கடைகளும் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அரசு மதுபான கடையான டாஸ்மாக் கடை இயங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மது பிரியர்கள் கடந்த சில வாரங்களாக மது அருந்தாமல் செய்வதறியாது உள்ளனர்



குறிப்பாக மது பானத்திற்கு அடிமையானவர்கள் பலர் எதாவது செய்து தங்களை மதுபோதையில் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு மதுபான கடைகளின் சுவர்களில் ஓட்டை போட்டு மது பாட்டில்களை திருடுகின்றனர். சிலர் கள்ளச்சாராயத்தை தேடுகின்றனர். இதனை பயன்படுத்திக்கொண்ட கள்ளச்சாராய வியாபாரிகள் தற்போது பல இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதும், விற்பனையில் ஈடுபடுவதுமாய் உள்ளனர். 


இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடலோர கிராமமான தொடுவாய் கிராமத்தில் காட்டுப் பகுதியில் சாராய ஊறல் போட்டிருப்பதாக கிராமமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் மதுவிலக்கு அமலாக்கத்துறை பிரிவு போலீசார் காட்டுப் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பக்கிங்காம் கால்வாய் அடுத்த காட்டுப்பகுதியில் 200 லிட்டர் ஊறல் சாராயம் புதைத்து வைக்கபட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து அதனை தோண்டி எடுத்து தரையில் கொட்டி அழித்தனர். இதனை தொடர்ந்து மதுவிலக்கு போலீசார் நடத்திய விசாரணையில் தொடுவாய் கிராமத்தை அடுத்த திருமுல்லைவாசல் கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவர் கள்ளச்சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. தலைமறைவான விஜயகுமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.



மேலும் ஒருங்கிணைந்த மயிலாடுதுறை மாவட்டத்தில் 29 ஆயிரத்து 95 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு 23 ஆயிரத்து 296 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மயிலாடுதுறை, செம்பனார்கோவில், குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி, புத்தூர் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் 5463 சிகிச்சை பெற்று வரும் நிலையில் 336 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.  


இது போன்று ஊரடங்கு காலத்தில் சட்டத்திற்கு புறம்பாக சாராய விற்பனையில் ஈடுபடும் நபர்களை தண்டித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.