தனுஷ் நடித்துள்ள வாத்தி படத்தில் இடம்பெற்ற வா வாத்தி பாடலை மழலை பாடகி மேக்னா குரலில் கேட்ட இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் அதனை பாராட்டி ட்வீட் செய்துள்ளார். 


தெலுங்கு திரைப்பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகி வரும் ’வாத்தி’ படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். மேலும் சாய்குமார், தனிக்கெல்லா பரணி, கென் கருணாஸ் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.






ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு ‘வாத்தி’ படத்தின் டீசர், போஸ்டர்கள் வெளியாகியிருந்தது.


படம் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அடுத்தாண்டு ரிலீசாகும் என கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இதனிடையே நவம்பர் 10 ஆம் தேதி வாத்தி படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் சிங்கிளாக வா வாத்தி பாடல் வெளியானது. தனுஷ் எழுதிய இந்த பாடலை ஸ்வேதா மோகன் பாடியிருந்தார். ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இப்பாடல் பலரின் பேவரைட் ஆகவும் மாறியுள்ளது. 






இதற்கிடையில் மிக இளம் வயதிலேயே தனது பாடும் திறமையால் பலரையும் கவர்ந்த பெங்களூவை சேர்ந்த மேக்னா சுமேஷ்  வா வாத்தி பாடலை பாடி அசத்தியுள்ளார். இதனை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் நான் படப்பிடிப்பு தளத்துக்கு வரும் போது சக நட்சத்திரம் என் பாடல் பாடி ஆச்சரியமளித்த தருணம்..நன்றாக பாடுகிறாய் மேக்னா என பாராட்டியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.