இந்திய திரையுலகில் பிரபலமான நடிகராக உலா வருபவர் மோகன்லால். மலையாள திரையுலகின் மெகா ஸ்டாராக உலா வருபவர். இவருக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.


மருத்துவமனையில் மோகன்லால்:


இதையடுத்து, கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அவர் அனுமதிக்கப்பட்டார். 64 வயதான மோகன்லால் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மோகன்லாலுக்கு கடுமையான காய்ச்சல், மூச்சுத்திணறல் மற்றும் தசை வலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


தற்போது உடல்நலம் எப்படி?


கொச்சினில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனை நிர்வாகம் மோகன்லாலுக்கு சுவாச தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்றும், அதன் காரணமாக அவருக்கு இந்த பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் தகவல் தெரிவித்துள்ளனர்.  தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, மோகன்லால் உடல்நலம் தேறி வருவதாக தெரிவித்துள்ளனர்.


அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் அவரை 5 நாட்கள் ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். மேலும், அவர் சில நாட்களுக்கு பொது இடங்களுக்கு செல்வது மற்றும் பொதுவெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


விரைவில் டிஸ்சார்ஜ்:


லூசிபர் 2ம் பாகமான எம்புரான் படத்தின் படப்பிடிப்பிற்காக மோகன்லால் குஜராத் சென்றிருந்தார். குஜராத் சென்று திரும்பிய நிலையில், அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மீண்டும் உடல்நலம் தேறி வருவது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


விரைவில் அவர் உடல்நலம் தேறி மீண்டும் படப்பிடிப்பு பணிகளில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நீண்ட காலம் திரையுலகில் இருக்கும் மோகன்லால் முதன்முறையாக பரோஸ் என்ற படத்தையும் இயக்கியுள்ளார். அந்த படமும் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மோகன்லால் தமிழில் சிறைச்சாலை, ஜில்லா ஆகிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் புகழ்பெற்றவர்.  அவர் விரைவில் நலம் பெற ரசிகர்களும், மற்ற பிரபலங்களும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.