சூர்யாவின் கருப்பு திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது. தமிழ்நாட்டில் கருப்பு திரைப்படம் சுமார் ரூ130 கோடி வரை வசூலித்துள்ளது. ஆனால் வெளிநாடுகளில் கருப்பு திரைப்படத்தின் வசூலை வெறும் நான்கே நாட்களில் முறியடித்துள்ளது மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் 3. இந்தியாவைப் போலவே மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலுக்கு உள்ள ரசிகர் பலத்தையே இந்த வசூல் காட்டுகிறது
இந்த ஆண்டு கோடை விடுமுறை சினிமா ரசிகர்களுக்கு சிறப்பாகவே அமைந்துள்ளது என்று சொல்லலாம். கடந்த மே 14 ஆம் தேதி வெளியான சூர்யாவின் கருப்பு இரண்டாம் வாரத்திலும் சக்கைப் போடு போட்டு வருகிறது. சுமார் ரூ140 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் கருப்பு படம் இதுவரை உலகளவில் ரூ250 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் ரூ130 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது. இரண்டாவது வார இறுதியிலும் படத்திற்கு கனிசமான அளவு மக்கள் கூட்டம் இருந்து வருவதால் மூன்றாவது வாரத்தில் கருப்பு 300 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருப்பு வசூலை முந்திய த்ரிஷ்யம் 3
கருப்பு படம் வெளியாகிய அடுத்த வாரம் மலையாளத்தில் மோகன்லால் நடித்துள்ள த்ரிஷ்யம் 3 வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இப்படம் கருப்பு படத்திற்கு வசூல் ரீதியாக சரியான போட்டி கொடுத்து வருகிறது. த்ரிஷ்யம் 3 வெளியாகி 6 நாட்களில் உலகளவில் ரூ 170 கோடி வரை வசுல் செய்துள்ளது. இது கருப்பு படத்தின் முதல் வார வசூலைக் காட்டிலும் அதிகமாகும். அதே நேரம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கருப்பு திரைப்படம் இரண்டு வாரங்களில் ரூ 67.1 கோடி வரை வசூல் செய்துள்ளது. த்ரிஷ்யம் 3 திரைப்படம் முதல் நான்கு நாட்களில் ரூ77.6 கோடிவரை வெளிநாட்டு திரையரங்குகளில் வசூல் செய்துள்ளது. சூர்யாவின் கரியரில் வெளிநாடுகளில் அதிக வசூல் ஈட்டிய படமாக கருப்பு அமைந்துள்ளது. மலையாளத்தில் மோகன்லாலின் படங்கள் வசூலில் புதிய சாதனைகளை படைப்பது அடிக்கடி நிகழ்வது தான். படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் மோகன்லாலுக்கு இந்தியாவிற்குள்ளும் பிற நாடுகளிலும் ஒரு பெரிய ரசிக பலம் இருப்பதையே இந்த வசூல் காட்டுகிறது.
