“செண்பகமூர்த்தியை தவெக அரசு தவிர்ப்பது நல்லது. பாதிக்கப்பட்ட ஒருவனாக சொல்கிறேன்” என்று முதலமைச்சர் விஜய்க்கு கோரிக்கை விடுத்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
அன்பிற்கினிய முதல்வருக்கு...எம் மண்ணின் மைந்தனாக தாங்கள் முதல்வராக பதவியேற்றிருப்பதில் மிக்க மகிழ்ச்சி. தமிழ் சினிமாவை தனது கைக்குள் மட்டுமே வைத்துக்கொள்ளும் நிகழ்வுகள் நடந்தேறியது. செண்பகமூர்த்தி போன்ற நபரால் பாதிக்கப்பட்டோர் பலர். அதில் பொருளாதார ரீதியாக பாதிப்புக்குள்ளாகியவர்களில் நானும் ஒருவன். மோனோபாலியை உருவாக்கியவர். அம்பதாயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை சிதைத்தவர். சினிமாவில் தாங்கள் மட்டுமே என போலி பிம்பத்தை உருவாக்கி வாழ்ந்துகொண்டிருப்பவர். முதல்வர் விஜய் வந்த பிறகாவது காலங்கள் மாறும்.. காட்சிகள் மாறும் என நினைத்தால்... இப்படியொரு புகைப்படம். பாதிப்படைந்தோரின் நிலையும் மனநிலையும் கொஞ்ச நஞ்சமல்ல. வார்த்தைகளால் விவரிக்க இயலாது.
திரைத்துறை இவரைப் போன்றவர்களால் மட்டுமே இயங்குவதாய் பிம்பம் அமைத்து மற்றவர்களை இழப்பிற்குள்ளாக்குவார்கள். எத்தனையோ தயாரிப்பாளர்கள் அவதியுற்றிருக்கிறார்கள். அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவரது கட்சிக்காரரான நடிகர் இயக்குனர் போஸ் வெங்கட் தனது பேட்டியில் வெளிப்படையாக செண்பகமூர்த்தியின் மோனோபாலி பற்றி பேசியிருப்பார். மனதுவந்து கேட்டுக்கொள்கிறேன் இவர்களைப் போன்றவர்களை சரியாக பராமரிக்காமல் போனால் தமிழ் சினிமாவில் பலர் காணாமல் போய்விடுவார்கள். அது தவிர்க்க செண்பகமூர்த்தி போன்றவர்களை இந்த அரசு தவிர்ப்பது நல்லது. பாதிக்கப்பட்ட ஒருவனாகப் பதிகிறேன்.
தமிழ் சினிமாவிற்கு ஒரு சுதந்திரக்காற்றை உயிர்மூச்சை தருவீர்கள் என நம்புகிறேன். பாதிக்கப்பட்டவன் என்ற முறையில் என் ஆதங்கத்தைப் பதிவு செய்கிறேன். இது தொடர்கதையாகக் கூடாது என்பதையும் தங்கள் கவனத்திற்கு கொணர்கிறேன். தாங்கள் தலைமையேற்றிருக்கும் அரசும்.. அமைச்சரவையும் இத்தகைய சிண்டிகேட் தொழில்முறைகளைத் தடுக்கும் என நம்புகிறேன். மாற்றங்கள் என்பதே நம்பிக்கைதான். நிகழட்டும். திரையுலகம் மீளட்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
